நெல்லை புத்தக கண்காட்சி - கடைசி நாளில் திரண்ட மக்களால் திணறிய ஸ்டால்கள்
நெல்லை: நெல்லையில் நடைபெற்ற புத்தக கண்காட்சியில் கடைசி நாளான நேற்று அலைகடலென மக்கள் திரண்டு வந்ததால் புத்தக ஸ்டால்கள் திணறி போயின.
பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில் புத்தக கண்காட்சி கடந்த 18 ஆம் தேதி முதல் துவங்கியது.
மொத்தம் 150 அரங்குகளில் 143 பதிப்பகத்தார் புத்தகங்களை விற்பனை செய்தனர்.
குவிந்த மாணவர்கள்:
கண்காட்சி நடந்த 10 நாட்களும் மக்கள் கூட்டம் அலை மோதியது. குறிப்பாக மாலை நேரங்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. இறுதி நாளான நேற்று விடுதி மாணவர்களும், வாசகர்களும், பள்ளி மாணவ, மாணவிகளு்ம் திரளாக திரண்டதால் எங்கு பார்த்தாலும் கூட்டம் கூட்டமாகவே தெரிந்தது.
அள்ளிச் சென்ற வாசகர்கள்:
நாவல்கள், வாழ்க்கை வரலாறு, பொது அறிவு தொடர்பான புத்தகங்கள், திருக்குறள் உரைகள், ஆன்மீக புத்தகங்கள் என ஒவ்வொரு வாசகரும் புத்தகங்களை அள்ளி சென்றனர்.
விற்பனை அதிகம்:
கண்காட்சியில் இந்தாண்டு புத்தக விற்பனை குறித்து நியூ செஞ்சுரி புக் டிராஸ்ட் மேலாளர் பாலசுப்பிரமணியன் கூறுகையில், " புத்தக கண்காட்சியில் கடந்த ஆண்டை விட அதிக வாசகர்களை பார்க்க முடிந்தது.
அதிக லாபம்:
விற்பனை அளவிலும் எதிர்பார்த்த லாபம் கிடைத்துள்ளது. கலை, வரலாறு, இறையன்பு எழுதிய புத்தகங்கள், நாவல்கள் ரூபாய் 15, ரூபாய் 20க்கு நாங்கள் வெளியிட்டுள்ள புத்தகங்கள் பெருமளவு விற்பனையாகியுள்ளன" என்று அவர் தெரிவித்தார்.
30 ஆயிரம் ரசிகர்கள்:
புத்தக கண்காட்சியை சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள் மட்டும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டு சென்றுள்ளனர். போட்டி தேர்வுகளுக்கு உரிய புத்தகங்களும், இலக்கியம் தொடர்பான புத்தகங்களும் இவ்வாண்டு கண்காட்சியில் அதிகம் விற்பனையாகியுள்ளன.
மொழிபெயர்ப்புக்கு மவுசு இல்லை:
ஆனால் மொழிபெயர்ப்பு, மேலைநாட்டு இலக்கியம் தொடர்பான புத்தகங்களுக்கு நெல்லை வாசகர்களிடம் வரவேற்பு இல்லை என பதிப்பகத்தார் குறைபட்டு கொண்டனர்.
உணவும் விலை அதிகம்:
புத்தக கண்காட்சியை காண வந்த பொதுமக்கள் அரங்குகளில் உணவு உண்ண தராளமாக ரூபாய் 400 வரை செலவு செய்ததால் அவற்றி்ன் விலையும் ஏறி காணப்பட்டது.