144 தடை உத்தரவிற்கு பிறகும் மோதல்.. செங்கோட்டை விநாயகர் சிலை ஊர்வலத்தில் பதற்றம்
நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
நெல்லை: நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது மோதல் ஏற்பட்டுள்ளது. தென்காசி, செங்கோட்டையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது.
நாடு முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகத்தின் பல மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
விநாயகர் சிலை ஊர்வலம்
பல இடங்களில் நேற்றே விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஆறு மற்றும் கடல்களில் கரைக்கப்பட்டது. இந்நிலையில் நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது.
மோதல் தடியடி
அப்போது இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலில் முடிந்தது. இதையடுத்து மோதலை கட்டுப்படுத்த முயன்ற போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.
60 வாகனங்கள் சேதம்- பதற்றம்
இந்த மோதலின் போது 40 இருசக்கர வாகனம், 20 கார்கள் சேதப்படுத்தப்பட்டன. இதனால் செங்கோட்டையில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவிவருகிறது.
144 தடை உத்தரவு
இந்நிலையில் விநாயகர் ஊர்வலத்தின் போது மோதல் ஏற்பட்டதை அடுத்து செங்கோட்டை மற்றும் தென்காசியில் மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. நாளை மாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு நீடிக்கும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அமைதியாக ஊர்வலம்
பேச்சுவார்த்தையில் வழக்கமான பாதையில் விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்து செல்ல உடன்பாடு ஏற்பட்டுள்ளது. 30 சிலைகளையும் அமைதியாக ஊர்வலமாக எடுத்து சென்று கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
டாஸ்மாக் மூட உத்தரவு
மேலும் மோதல் மற்றும் 144 தடை உத்தரவை தொடர்ந்து செங்கோட்டை, கடையநல்லூர், தென்காசியில் மதுக்கடைகளை மூடவும் மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மீண்டும் மோதல்
இந்த நிலையில் செங்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் மீண்டும் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பும் கல்வீசித் தாக்கிக் கொண்டதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் நெல்லை செங்கோட்டையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.