கிராமப்புற இளைஞர்கள் 15 பேருக்கு ஜப்பானில் நல்ல சம்பளத்தோடு பணி நியமனம்.. நெல்லை கலெக்டர் பாராட்டு!
நெல்லை பாலிடெக்னிக் மாணவர்கள் 15 பேர் ஜப்பானுக்கு தொழில்நுட்ப பயிற்சி மற்றும் பணிக்காக 5 ஆண்டுகள் செல்வதை கலெக்டர் பாராட்டினார்.
நெல்லை: பாலிடெக்னிக் மாணவர்கள் 15 பேர் ஜப்பானுக்கு தொழில்நுட்ப பயிற்சி மற்றும் பணிக்காக 5 ஆண்டுகள் செல்வதை கலெக்டர் பாராட்டினார்.
மத்திய அரசின் திறன் மேம்பாட்டு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் சார்பில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோருக்கு பல்வேறு துறைகளில் பயிற்சியளிக்கவும், வேலைவாய்ப்பு, தொழில்முனைவோர் ஆக்கவும் திட்டமிட்டு பணிகள் நடக்கிறது.
இதன் ஒரு அங்கமாக பாலிடெக்னிக் கல்லுாரியில் பயின்ற மாணவர்களை வெளிநாடுகளுக்கு சென்று திறன் மேம்பாட்டு பயிற்சியளிக்கவும் ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகளுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் தெற்கு விஜயநாராயணத்தில் செயல்படும் தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில் கடந்த 2016ல் படிப்பு முடித்த மாணவர்கள் 15 பேர் ஜப்பானுக்கு பயிற்சி மற்றும் பணிக்காக செல்கின்றனர். இவர்கள் 3 ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரை ஜப்பானில் மேக்செல் எலக்ட்ரானிக்ஸ் என்ற நிறுவனத்தில் பணிபுரிய தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஆரம்பத்தில் இவர்களுக்கு பிடித்தம் போக 60 ஆயிரம் ரூபாய் ஊதியமாக வழங்கப்படுகிறது. தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் அங்கு தங்கி பயிற்சி பெறுவார்கள். பின்னர் இந்தியாவில் உள்ள ஜப்பானிய நிறுவனங்களிலோ, அல்லது ஜப்பானில் உள்ள நிறுவனங்களிலோ பணியாற்றும் வாய்ப்புள்ளது. ஜப்பான் நிறுவனத்துடன் இணைந்து இதற்கான ஏற்பாடுகளை சென்னையில் செயல்படும் நிகோன் நிறுவனம் செய்துள்ளது.
மேலும் நிகோன் நிறுவனத்தின் சார்பில் மாணவர்கள் 15 பேருக்கும் 6 மாத காலம் ஜப்பான் மொழியில் பயிற்சியளிக்கப்பட்டது. இதற்காக ஜப்பானில் இருந்து 4 ஆசிரியர்கள் சென்னை வந்திருந்தனர். மேலும் ஜப்பானிய மேக்செல் நிறுவனம், நெல்லையில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று களஆய்வு செய்த பின்னரே பணிநியமனம் வழங்கியது.
டில்லியில் நடந்த நிகழ்ச்சியில், மத்திய திறன்மேம்பாடு தொழில்முனைவோர்த்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வேலைவாய்ப்புக்கான பணி உத்தரவை வழங்கினார்.
நெல்லையில் பின்தங்கிய கிராமப்புற மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தந்த தனியார் பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகிகள் நிகோன் நிறுவன செயல்அலுவலர் கிருஷ்ணன் ஆகியோர் இன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்துாரியை சந்தித்தனர்.
மாணவர்கள் 15 பேரையும் கலெக்டர் பாராட்டியதோடு, நெல்லையில் இருந்து செல்லும் மாணவர்கள் இந்தியாவின் பிரதிநிதிகளைப்போல செல்கிறீர்கள். அங்குள்ள கலாச்சாரம், சட்டவிதிகள் போன்றவற்றை பின்பற்றி இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் செயல்படுங்கள் என்றார்.