முதல்வர் பிரச்சாரத்தில் போராட்டம் செய்வோம்: மனோ கல்லூரி மாணவர்கள் எச்சரிக்கை
சங்கரன் கோவில்: முதல்வர் ஜெயலலிதா சங்கரன்கோவிலில் பிரச்சாரம் செய்ய வரும் போது போராட்டம் நடத்தப்போவதாக மனோ கல்லூரி மாணவர்கள் அறிவித்துள்ளனர்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் கீழ் புளியங்குடி, சங்கரன்கோவில், நாகம்பட்டி, கோவிந்தபேரி, திசையன்விளை மற்றும் பணகுடி ஆகிய இடங்களில் மனோ கல்லூரி இயங்கி வருகிறது.
சங்கரன்கோவிலில் கடந்த 2000 ம் ஆண்டு தொடங்கப்பட்ட மனோ கல்லூரி வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது.
சொந்தகட்டிடத்தில் இயங்கவேண்டும் மாணவ, மாணவிகளுக்கு அடிப்படை வசதி வேண்டும் என மாணவர்கள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து கல்லூரிக்கு இடம் தேர்வு செய்யப்பட்டது.
அப்போதைய ஆட்சித்தலைவர் செல்வராஜ் தேர்வு செய்த இடம் மிக தொலைவில் இருப்பதாக கூறி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அமைச்சர்கள் பழனியப்பன், செந்தூர்பாண்டியன், மாவட்ட வருவாய் அதிகாரி ஆகியோர் ரயில் நிலையம் அருகே உள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் மனோ கல்லூரி கட்ட நடவடிக்கை மேற்கொண்டனர். இந்நிலையில் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலின் போது மனோ கல்லூரிக்கான பிரச்சனை விரைவில் தீர்க்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் அறிவிப்புக்குப் பின் எந்த பணிகளும் நடைபெறவில்லை என கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தென்காசி மக்களவை தொகுதி வேட்பாளர் வசந்தி முருகேசனை ஆதரித்து நாளை சங்கரன்கோவில் பகுதிக்கு முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரம் செய்ய உள்ளார். இந்த நிலையில் வாக்குறுதி அளித்தபடி நிறைவேற்றாத முதல்வருக்கு எதிராக போராட்டம் நடத்த போவதாக இந்திய மாணவர் சங்க செயலாளர் அசோக்ராஜ், துணைத் தலைவர் சிலம்பரசன், கல்லூரி மாணவர் பேரவை தலைவர் அன்ட்ரோ, தாலுகா தலைவர் பாலம்மாள் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
மாணவர்கள் போரட்ட அறிவிப்பு காரணமாக, முக்கிய புள்ளிகள்,அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.