”கொலைகள் ராஜ்ஜியம் நெல்லை” – தொடரும் கொலைகளைத் தடுக்க டிஜிபி அதிரடி உத்தரவு
நெல்லை: நெல்லையில் சாதி ரீதியாக தொடரும் கொலைகளை இனியும் அனுமதிக்க கூடாது என டிஜிபி புதிய போலீஸ் அதிகாரிகளுக்கு கண்டிப்பான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தென் மாவட்டத்தில் தொடர்ச்சியாக சாதி கொலைகள் அடிக்கடி அரஙகேறி வருகின்றன. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 10 மாதங்களில் மட்டும் சுமார் 100க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதில் 25க்கும் மேற்பட்டோர் ஜாதி மோதல்களால் கொல்லப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி தொடர்ச்சியாக நடந்து வரும் கொலைகளால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். போலீசாரும் தூக்கத்தை தொலைத்து விட்டு தவித்து வருகின்றனர்.
இந்த கொலைகளால் தொடர்ந்து சாலை மறியல், பஸ்கள் மீது கல்வீச்சு, கொலை செய்யப்பட்டவர்கள் உடலை வாங்காமல் உறவினர் போராட்டம் என தினம் தினம் நடந்து வருவதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஜாதி மோதல்களை போலீசார் தடுக்க தவறி விட்டதாகவும், உளவு பிரிவினர் ஒருதலைபட்சமாக நடப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் பழைய அதிகாரிகளான நெல்லை டி.ஐ.ஜி சுமித் சரண், எஸ்பி நரேந்திரன் நாயர் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில் சட்டம் ஒழுங்கு குறித்து ஆய்வு செய்வதற்காக டிஜிபி அசோக்குமார் சென்னையிலிருந்து விமானம் மூலம் நெல்லைக்கு வந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம், " ரவுடிகள் மற்றும் கூலிப்படையினரை ஒழிக்க கடும நடவடிக்கை எடுக்கப்படும். முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக ரவுடிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்வது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்.
பழைய குற்றவாளிகளின் செயல்பாடுகளை கண்காணிக்கவும் போலீசாருக்கு ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள போலீசாரின் குறைகள், கருத்துகள் குறித்து கேட்டறிந்துள்ளேன்.
அவர்களின் குறைகள் விரைவில்களையப்படும். விரைவில் சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் கொண்டு வருவோம். யாருக்கும் பாகுபாடு காட்ட கூடாது என கண்டிப்பாக உத்தரவு இட்டுள்ளேன்" என்று தெரிவித்தார்.