நெல்லை மாவட்டத்தில், வழக்கறிஞரை தாக்கிய இன்ஸ்பெக்டர் உட்பட 6 போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட்!
நெல்லையில் வழக்கறிஞர் செம்மணி தாக்கப்பட்ட விவகாரத்தில் பணகுடி காவல் ஆய்வாளர் உள்பட 6 பேர் பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி : நெல்லையில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட வழக்கறிஞர் செம்மணி தாக்கப்பட்ட விவகாரத்தில் பணகுடி காவல் ஆய்வாளர் உள்பட 6 பேர் பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் கோர்ட்டில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்த ராஜரத்தினம் என்ற செம்மணி இவர் கூடங்குளம் அணு உலை எதிர்பாளர் உதயகுமார் மற்றும் அவர்களது ஆதரவாளர்களுக்கு வழக்கறிஞராக ஆஜராகி வந்தார். இந்த நிலையில் செம்மணி, தன்னை ஒருவர் தாக்கியதாக போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரில் நடவடிக்கை எடுக்காததால் நாங்குநேரி கோர்ட்டில் புகார் மனு தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் போலீசார் செம்மணியை விசாரணைக்காக என்று அழைத்து சென்றனர். இதை அறிந்த மற்ற வக்கீல்கள் போராட்டம் நடத்தினர். இதனால் வக்கீல் செம்மணியை போலீசார் விடுவித்தனர்.
வழக்கறிஞர் செம்மணி மீது தாக்குதல்
அப்போது வக்கீல் செம்மணி தன்னை போலீசார் அடித்து சித்ரவதை செய்ததாக கூறி பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். வழக்கறிஞர் செம்மணியை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வழக்கறிஞர்கள் தொடர் போராட்டம்
இதைத்தொடர்ந்து பணகுடி இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸ், சப்-இன்ஸ்பெக்டர் பழனி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கார்லோஸ், ஏட்டுக்கள் செல்லத்துரை, சாகர் ஆகிய 5 பேர் பாளை ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றப்பட்டனர். எனினும் வக்கீல்கள் போலீசார் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
முதல்வரை முற்றுகையிட திட்டம்
மேலும் பத்திரிக்கையாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து நெல்லை வரும் முதல்வர் மற்றும் அமைச்சர்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். இதைத்தொடர்ந்து நேற்று வள்ளியூர் டி.எஸ்.பி. குமார் மாற்றப்பட்டு, புதிய டி.எஸ்.பி.யாக கனகராஜ் நியமிக்கப்பட்டார். மேலும் இந்த பிரச்சினை தொடர்பாக நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர் விசாரணை நடத்தினர்.
நெல்லை டிஐஜி உத்தரவு
விசாரணையின் முடிவில் செம்மணியை கடத்தி தாக்கிய சம்பவத்தில் பணகுடி ஆள்வாளர் ஸ்டீபன் ஜோன்ஸ், எஸ்ஐகள் பழனி, செல்லத்துரை, சிறப்பு தனிக்கடை போலீஸ் ஜோன்ஸ், நாகராஜன், சந்தனபாண்டியன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து நெல்லை டிஐஜி கபில்குமார் சரத்கர் உத்தரவிட்டுள்ளார்.