செங்கோட்டை அருகே புலிகள் நடமாட்டம்... ஆடுகளை கடித்துக் குதறியதால் பொதுமக்கள் பீதி
நெல்லை : செங்கோட்டை அருகே கிராமத்திற்குள் புகுந்த புலிகள், மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை கடித்துக் குதறியதையடுத்து பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
மேற்குத்தொடர்ச்சி அடிவாரத்தில் அமைந்துள்ளது வண்ணாத்திப் பாறை தாளிமரத்தேரி கிராமம். அப்பகுதியில் 3 ஏக்கர் நிலத்தில் கரீம், ரஹ்மத் பீவி, ஆகியோர் ஆடுகளை வைத்து அங்கேயே தங்கி விவசாயம் செய்து வருகின்றனர்.
நேற்று மாலை சுமார் 6 மணியளவில் ஆடுகள் அங்குள்ள பகுதியில் மேய்ந்துக் கொண்டிருந்தது. அவர்களது மகன் கலீல் ரஹ்மான் தங்களது தோட்டத்திற்கு சென்றார். அப்போது ஆடுகள் கலைந்து ஓடியதைக் கலீல் ரஹ்மானும் அவரது தாயும் சென்று பார்த்துள்ளனர்.
அப்போது அவர்கள் வீட்டிலிருந்து 200 மீட்டர் தூரத்தில் இரண்டு புலிகள் ஆட்டை பிடித்து கடித்துக் குதறியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து, அவர்கள் கூச்சலிட்டதால், ஆட்டை அங்கேயே போட்டுவிட்டு புலிகள் காட்டுக்குள் தப்பி ஓடிவிட்டன. இது குறித்து, உடனடியாக கலீல் ரஹ்மான் தனது நண்பர்களுக்கு தகவல் கொடுத்து அவர்கள் திரண்டு வந்து புலிகளைத் தேடினர்.
புலிகள் தப்பி ஓடிவிட்டதையடுத்து, எந்நேரமும் மீண்டும் வரலாம் என்பதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.