பகலெல்லாம் வெயில் அடிக்குது.. அதிகாலையில் பனி கொட்டுது.. நெல்லையில் மக்கள் அவதி!
நெல்லை: நெல்லை பகுதியில் அடிக்கடி சிதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் குழப்பமடைந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோடை வெயில் வழக்கமாக ஏப்ரல் - மே மாதங்களில் கொளுத்தும். ஆனால் இந்த ஆண்டு மார்ச் முதல் வாரத்திலேயே வெயில் உக்கிரம் காட்ட தொடங்கி விட்டது.
கடந்த சில நாட்களாக பெரும்பாலான நகரங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரியை தாண்டி விட்டது.
புரட்டியெடுக்கும் வெப்பம்
வேலூர் மற்றும் உள் மாவட்டங்களில் இப்போதே அக்னி நட்சத்திர காலம் போல வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் குளம், ஏரிகளில் தண்ணீர் வற்றி வருகிறது. அணைகளும் வறண்டு வருகிறது.
ஊட்டியிலும் வெயிலடிக்குதே
நிலத்தடி நீர் மட்டமும் வெகு வேகமாக குறைந்து வருவதால் குடிநீர் பஞ்ச அபாயமும் ஏற்பட்டுள்ளது. குளிர் பிரதேசமான ஊட்டி, கொடைக்கானலிலும் வெப்பம் அதிகரித்துள்ளது.
பழ விற்பனை அதிகம்
இந்த வெயிலின் காரண்மாக குளிர்பானங்கள், பழங்கள் விற்பனை அதிகமாக நடந்து வருகிறது. அதேபோல நுங்கு, தர்பூஸ் விற்பனையும் களை கட்டியுள்ளது.
நெல்லையில் வினோதம்
இந்த நிலையில் நெல்லையில் வினோதமான சிதோஷ்ணம் நிலவுகிறது. பகலில் வெயிலில் கொளுத்துகிறது. இரவில் அப்படியே தலை கீழாக மாறி விடுகிறது. இரவு 7 மணி முதல் அதிகாலை 2 மணி வரை வெப்பத்தை உணர முடிகிறது. அதன் பிறகு 3 மணியிலிருந்து அதிகாலை 5.30 மணி வரை பனிப்பொழிவு காணப்படுகிறது.
இப்ப எதுக்கு பனி ?
வழக்கமாக மார்கழி, தை மாதங்களில் தான் இந்த அதிகாலை பனிப்பொழிவு இருக்கும். இந்த சிதோஷ்ண நிலை மாற்றத்தால் பொதுமக்கள் பகலில் வெப்பத்திலும், இரவில் பனியிலும் சிக்கி தவித்து வருகின்றனர்.