நெல்லை மாவட்டத்தில் மொத்தம் ஒரு லட்சத்து 40 ஏக்கர் நிலத்தில் நெல் நடவுப்பணிகள் தொடங்கியது
நெல்லை:நெல்லை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 40 ஏக்கர் நிலத்தில் பிசான பருவ நெல் சாகுபடிக்கான நடவு பணிகள் துவங்கியுள்ளன.
தாமிரபரணி ஆற்று பாசனத்தின் மூலம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 86 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் பெய்யும் தென்மேற்கு பருவமழையை நம்பி கார் பருவ நெல்சாகுபடி நடக்கிறது. அக்டோபர் துவங்கி நான்கு மாதங்களில் வடகிழக்கு பருவமழைக்காலத்தில் பிசான நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.
நெல்லை மாவட்டத்தில் 72 அடி கொள்ளளவுக் கொண்ட கருப்பாநதி, 36 அடி கொள்ளளவுக் கொண்ட குண்டாறு நீர்தேக்கம் மற்றும் ராமநதி, கடனாநதி ஆகிய சிறிய அணைகள் நிரம்பி விட்டன. இந்த அணைகளில் இருந்தும் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 104 அடியை கடந்துவிட்டது. பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்தும் தேவைக்கேற்ப தண்ணீர் திறக்கப்படுகிறது. எனவே நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பிசான நெல் சாகுபடிக்கான நடவுப்பணிகள் முழுவீச்சில் துவங்கியுள்ளன. தாமிரபரணி ஆற்றின் மூலம் நெல்லையில் 40 ஆயிரம் ஏக்கர், தூத்துக்குடியில் 46 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இவை தவிர நெல்லை மாவட்டத்தில் தென்காசி, கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில், ராதாபுரம் என மற்ற அணைகளின் நீர்ப் பாசனத்தின் மூலம் சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.
எனவே இந்த பருவத்தில் நெல்லை மாவட்டத்தில் மொத்தம் ஒரு லட்சத்து 40 ஏக்கர் நிலத்தில் நெல் நடவுப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே விவசாயிகள், உழவு, நாற்று பாவுதல், நடவு, உரம் போடுதல் போன்ற சாகுபடி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். நெல்லையில் பிசான சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளது.