சிறுகிழங்கு விளைச்சல் பாதிப்பு- காட்டு பன்றிகள் அட்டகாசத்தால் விவசாயிகள் பீதி
நெல்லை: நெல்லை அருகே காட்டு பன்றிகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருவதால் விவசாயிகள் உழவார பணிக்கு செல்ல முடியாமல் பீதியில் உறைந்து போய் உள்ளனர்.
நெல்லை அருகே உள்ள கடையம், கோவிந்தபேரி, மந்தியூர் சம்பன்குளம், ஆழ்வார்குறிச்சி, ஆம்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் சிறு கிழங்கு பயிர் செய்துள்ளனர்.
கடையம் பகுதியில் மட்டும் ஆயிரம் ஏக்கருக்கு மேல் சிறுகிழங்கு பயிர் செய்யப்பட்டுள்ளது. நாற்று நட்டு சிறுகிழங்கு வளர 6 மாத காலம் ஆகும். கடந்த மே மாதம் சிறுகிழங்கு நடவு செய்யப்பட்டு தற்போது அதை பறிக்கும் பணி நடந்து வருகிறது.
பிடுங்கிய கிழங்குகளை உலர்த்தி தரம் பிரித்து அருகே உள்ள பாவூர்சத்திரம் மார்க்கெட்டுக்கு கொணடு செல்வர். கடையம் பகுதி மலை அடிவாரத்தில் இருப்பதால் சிறுகிழங்குகளை காட்டு பன்றிகள் தின்று நாசப்படுத்தி வருகின்றன. வன விலங்ககளி்டம் இருந்து பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் போராடி வரும் நிலையில் தற்போது மழையும் சேர்ந்து வி்ட்டதால் அவர்கள் திண்டாடி வருகின்றனர்.
கடந்த ஆண்டு முதல் தர சிறுகிழங்கு ரூ.40 முதல் ரூ.55 வரை விலை போனது. தற்போது மழையாலும், விளைச்சல் குறைவாலும் சிறுகிழங்குகள் அழுகி விட்டன. இதனால் இந்த கிழங்குகள் தற்போது ரூ.30 முதல் ரூ.35 வரை மட்டுமே விலை போகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் காட்டு பன்றிகள் தொல்லையும் சேர்ந்துள்ளதால் அவர்கள் விளைநிலங்களுக்கு சென்று வேலை பார்க்கவே பயப்பட்டு வருகி்ன்றனர்.