ஊருக்குள் வலம் வரும் வனவிலங்குகள்- எச்சரிக்கை பலகை வைக்க வனத்துறையினர் தீவிர முயற்சி
ஊருக்குள் வனவிலங்குகள் வலம் வருவதால் வனத்துறையினர் எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர்.
நெல்லை: நெல்லை அருகே மலை அடிவார பகுதியில் வனவிலங்குகள் அடிக்கடி தென்பட்டு வருவதால் அவை செல்லும் பாதையில் எச்சரிக்கை பலகை வைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடையம் முதல் திறுங்குடி வரை 895 சதுர கிமீ தூரத்திற்கு புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. 14 நதிகள் உள்ள இப்பகுதியில் தற்போது கடும் வெயிலால் வனப்பகுதியில் உள்ள நீர் நிலைகளில் நீர்வரத்து குறைந்து விட்டது.
இதனால் வனவிலங்குகள் தங்கள் வாழ்விட பகுதியில் இருந்து இறங்கி சாலையை கடந்து மணிமுத்தாறு அணை பகுதிக்கு வந்து செல்கின்றன. இந்நிலையில் மணிமுத்தாறு-மாஞ்சோலை வனப்பகுதியில் மலைசாலையில் பயணிக்கும் வாகனங்கள், பயணிகள் கவனிக்காது செல்லும் வகையில் அவர்களுக்கும், வினவிலங்களுக்கும் தற்செயலாகவோ, முரண்படாகவோ ஏற்படும் விளைவை தடுக்கும் வகையில் எச்சரிக்கை பலகை வைக்கும் பணி தவிரமாக நடந்து வருகிறது.
வனவிலங்குகள் எந்தெந்த பகுதி வழியாக, எந்தெந்த வன விலங்குகள் சாலையை கடக்கும் என்பதையும், வனப்பகுதியில் அவை செல்லும் வழியையும் கண்டுபிடித்து சம்பந்தப்பட்ட வனவிலங்குகள் படத்துடன் மரப்பலகையில் எச்சரிக்கை போர்டு வைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மலைப்பாதையில் செல்லும் வாகனங்கள் குறைந்த வேகத்தில் செல்லுமாறும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.