விளைச்சலோ அமோகம்... விலையோ குறைவு - நெல் மூட்டைகளை விற்க முடியாமல் நெல்லை விவசாயிகள் தவிப்பு
அதிகமான விளைச்சல் இருந்தும் விலை குறைவாக உள்ளதாக நெல்லை விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
நெல்லை: நெல்லை, தூத்துக்குடி பல வருடங்களுக்கு பிறகு விளைச்சல் இருந்தும் விலை இல்லாதால் விவசாயிகள் பரிதவிப்பில் உள்ளனர்.
வடகிழக்கு பருமவழை கடந்த ஆண்டு ஓரளவுக்கு பெய்ததால் பாசன நெல் சாகுபடி களை கட்டியது. கிணறுகளில் நீர் இருப்பை வைத்து விவசாயிகள் பாசன சாகுபடியை செய்தனர்.
இந்நிலையில் அறுவடை செய்த நெல் மூட்டைகளை விற்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இது போதாது என்று அறுவடை களத்துக்கு வரும் வியாபாரிகள் இதுதான் சந்தர்ப்பம் என்று நெல் மூட்டைகளை அடிமாட்டு விலைக்கு வாங்குவதாக புகார் எழுந்துள்ளது.
நெல் மூட்டைகளை அரசு ஒரு குவிண்டால் ரூ.1660 கொள்முதல் செய்கிறது. இதில் தனியார் வியாபாரிகள் ஒரு குவிண்டாலுக்கு ரூ.1100 தான் நிர்ணயம் செய்கின்றனர்.
ஆண்டுதோறும் நெல் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்கள் விலை அதிகரித்து வரும் நிலையில் உற்பத்திக்கு ஏற்ப வருமானம் கிடைக்காமல் விவசாயிகள் பரிதவிப்பில் உள்ளனர்.
குவிண்டாலுக்கு ரூ.2000 கொடுத்தால் மட்டுமே லாபம் வரும் என அவர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இதில் அரசு கொள்முதல் நிலையங்கள் கொள்முதல் விலைக்கு கூட வாங்க மறுப்பதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
கொள்முதல் நிலையத்துக்கு வரும் விவசாயிகளிடம் மூட்டைகளை வைக்க இடமில்லை என்று கூறி திருப்பி அனுப்புவதாகவும் அவர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.