ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக நெல்லை அரசு மருத்துவமனை விரைவில் தரம் உயர்வு!
நெல்லை: பொன் விழா ஆண்டு விழாவை ஓட்டி நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் தென் மாவட்ட மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
பிரதம மந்திரி ஸ்வஸ்தய சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்பட உள்ளன.
இப்பட்டியலில் நெல்லை அரசு மருத்துவமனையும் இடம் பெற்றுள்ளது. 1965 ஆம் ஆண்டு தொடக்கப்பட்ட நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை இந்த ஆண்டு பொன் விழா கொண்டாடத்தை தொடங்கியுள்ளது.
பத்து சிறப்பு துறைகள்:
பொன் விழா ஆண்டின் புதிய பரிசாக ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டுள்ளது. தரம் உயர்த்தப்படுவதால் மேலும் 10 சிறப்பு துறைகள் ஏற்படுத்தப்படும் என தெரிகிறது.
கூடுதல் நோயாளிகள்:
நோயாளிகளின் படுக்கை எண்ணிக்கை உயர்த்தப்படுவதோடு சிறப்பு சிகிச்சை பிரிவில் கூடுதல் நோயாளிகள் அனுமதிக்கப்படுவர்.
ஆஞ்சியோ சிகிச்சைகள்:
தற்போது இருதய நோய் சிகிச்சை பிரிவில் ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோ பிளாஸ்டி போன்ற வசதிகளுக்கு நோயாளிகள் நெல்லை மருத்துவமனையில் பரிந்துரை பெற்று மதுரை பெரிய மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளது. ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்ந்தால் இந்த வசதி இங்கேயே கிடைக்கும்.
ஜனவரியில் கட்டிடப் பணி:
இதனால் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வரும் ஜனவரி முதல் 10 சிறப்பு துறைகளுக்கு அங்கு கட்டிட பணி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நவீன மருத்துவ சிகிச்சைகள்:
ஸ்பெஷாலிட்டி அந்தஸ்தை பெற்றதை ஒட்டி இருதய நோய், நுரையீரல் அறுவை சிகிச்சை, சிறுநீர் பை அறுவை சிகி்ச்சை உள்பட பல நவீன மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும்.
மகிழ்ச்சியில் மக்கள்:
இதனால் தென் மாவட்ட மக்களுக்கு இனிமேல உயர் சிகிச்சை கிடைக்கும் என அவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.