முண்டந்துறை புலிகள் காப்பகம் பகுதியில் கேமரா மாயம் - வனத்துறை ஊழியர்களிடம் விசாரணை
நெல்லை: முண்டத்துறை வனப்பகுதியில் மாயமான கேமராக்கள் குறித்து வன ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
நெல்லை மாவட்டம் களக்காடு முண்டத்துறை புலிகள் காப்பகத்திற்கு உள்பட்ட அம்பை, கடையம், பாபநாசம், மற்றும் முண்டத்துறை வனச்சரங்களில் யானை, புலி, சிறுத்தை, மிளா, மான் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. இந்த மிருகங்களை கணக்கெடுக்கும் பணிக்காக குறிப்பாக புலிகளை கணக்கெடுக்கும் பொருட்டு வனத்துறையினர் சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பல கேமராக்களை வனப்பகுதியில் பல இடங்களில் வைததிருந்தனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் பாபநாசம் வனச்சரகம் மற்றும் அம்பை வனச்சரகங்களில் தலா இரண்டு கேமராக்களை விஷமிகள் சிலர் திருடு சென்று விட்டனர். இது சம்பந்தமாக வனத்துறையினர் பலரை பிடித்து விசாரித்தும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. கேமரா எங்கே போனது என்றே தெரியவில்லை.
இதை அடுத்து வனத்துறை பாதுகாப்பு படை அதிகாரி, உதவி வன அலுவலர் ஆண்டியப்பன் சம்பந்தப்பட்ட வனச்சரங்களில் பணிபுரியும் வன ஊழியர்களிடம் கிடுக்குபிடி விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் கேமராக்கள் மாயமான பின்னனி குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளிவரும் என தெரிகிறது.