நெருங்கும் விநாயகர் சதுர்த்தி... நெல்லையில் 400 சிலைகள் பிரதிஷ்டை
நெல்லை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் இந்தாண்டு 400 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
நாடு முழுவதும் வரும் 17ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இதற்காக விதவிதமான விநாயகர் சிலைகள் தயாராகி வருகின்றன. தமிழகத்தில் இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செயயப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது.
நெல்லை மாநகரில் 72 விநாயகர் சிலைகள், மாவட்டத்தில் 288 சிலைகள் என மொத்தம் 360 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. இது தவிர மாவட்டத்தில் உள்ள வேறு சில அமைப்புகள் சார்பில் 50க்கும் மேற்படட சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்த திட்டமிட்டுள்ளது.
இதற்காக 3 அடி முதல் 10 அடி வரையிலான உயரம் கொண்ட விநாயகர் சிலைகளை வாங்கி தயார் நிலையில் வைத்துள்ளனர். மேலப்பாளையம் குறிச்சியில் 11 அடி உயர விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இது தவிர 110 சிறிய சிலைகளுக்கும் தினசரி பூஜைகள் நடத்தப்படுகின்றன.
இந்த நிலையில் இந்தாண்டு விநாயகர் சிலைகள் ஊர்வலத்துக்கு புதிய கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளது. சர்சைக்குரிய இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யவும், ஊர்வலமாக எடுத்து செல்லவும் போலீசார் தடை விதித்துள்ளனர்.
டவுண் பட்டாபத்தில் கடந்த ஆண்டு விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு விநாயகர் சிலை வைக்க இந்தாண்டு போலீசார் தடை விதித்துள்ளனர்.
ஆனால் தடையை மீறி அங்கு சிலையை வைக்கப் போவதாக இந்து முன்னணி அறிவித்துள்ளது. இதனால், அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. பாதுகாப்பிற்காக அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.