விளைச்சல் அதிகம்... கேந்தி பூக்கள் விலை கடும் சரிவு.. குப்பையில் கொட்டப்படும் சோகம்!
நெல்லை: நெல்லை அருகே கேந்தி பூக்கள் அதிகமாக விளைச்சல் கண்டுள்ளதால் அவற்றின் விலை கடுமையாக சரிந்துள்ளது. இதனால் விவசாயிகள் கலக்கத்தில உள்ளனர்.
நெல்லை மாவட்டம் கீழப்பாவூர், அருணாசலபேரி, பட்டமுடையார்புரம், வடக்கு சிவகாமிபுரம், பால்வண்ணநாதபுரம், அடைக்கலப்பட்டணம், பெத்தநாடார்பரட்டி, அரியபுரம், குலசேகரப்பட்டிணம், பாண்டியாபுரம், மேலப்பாவூர் பகுதியில் பல விவசாயிகள் மலர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.
இங்கு பறிக்கப்படும் பூக்களை விவசாயிகள் பாவூர்சத்திரம் அருகே சிவகாமிபுரத்தில் உள்ள தினசரி பூ மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வருவர். இங்கிருந்து நெல்லை மாவட்டத்தின் பல பகுதிகள், மற்றும் அண்டை மாநிலமான கேரளாவுக்கும் பூக்கள் கொண்டு செல்லப்படும். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேந்தி பூ விலை ரூ.50க்கு விற்கப்பட்டது. அதன் பின்னர் கேந்தி பூ விலை உயரவே இல்லை.
தற்போது நாள்தோறும் நான்கு ஆயிரம் கிலோ பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் வியாபாரிகள் வெறும் 500 கிலோ மட்டுமே வாங்கிச் செல்கின்றனர்.
இதனால் இந்த பூக்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வராமல் தோட்டத்திலேயே அப்படியே போட்டு வைத்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் சிலர் கூறுகையில், "கேந்தி பூக்களை தமிழக கோயில்களில் பயன்படுத்தக் கூடாது என தடை விதித்துள்ளனர். கேரள வியாபாரிகள் தான் இவற்றை அதிகம் வாங்கி செல்வர். தற்போது கேந்தி பூக்கள் விளைச்சல் நன்றாக இருக்கும் நிலையில் அவற்றை மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு சென்றால் அவற்றை வியாபாரிகள் குறைந்த அளவே வாங்குகின்றனர். இதனால் மீதி பூக்களை குப்பையில் கொட்டுவதை தவிர வேறு வழியில்லை" என்று வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.