பறிமுதல் செய்யப்பட்ட துப்பட்டாக்கள்.. தடை செய்யப்பட்ட ஜீன்ஸ்கள்.. நீட் தேர்வு அராஜகங்கள்!
நெல்லை: நெல்லையில், நீட் தேர்வுக்கு வந்த மாணவிகளை கடுமையாக சோதனையிட்டதால் அவர்கள் செய்வது அறியாமல் திகைத்தனர்.
தமிழகத்தில் இந்தாண்டு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரியில் பயில விரும்பும் அனைவருக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வழங்கப்பட்ட சலுகையும் இந்தாண்டு ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த மாணவ, மாணவிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னரே தேர்வு மையத்திற்கு வந்தனர். நெல்லையில் மொத்தம் 10 மையங்களில் இந்த தேர்வு நடந்தது.
துப்பட்டாவுக்குத் தடை
தேர்வு தொடங்குவதற்கு முன்னர் வேறு எந்த அரசு நுழைவு தேர்வுக்கும் நடக்காத சோதனை இதில் நடந்தது. சுடிதார் அணிந்து வந்த மாணவிகளுக்கு துப்பட்டா அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் தங்கள் துப்பட்டாவை கழற்றி பெற்றோரிடம் கொடுத்து விட்டு சென்றனர். நெல்லையில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் மாணவிகளின் துப்பட்டாக்கள் வெளியே குவியலாக வைக்கப்பட்டிருந்தது.
கறுப்புக் கயிறு கூடாது
மேலும் அவர்கள் காது, மூக்குகளில் அணிந்திருந்த நகைகளையும் அனுமதிக்கவில்லை. கழுத்தில் கட்டியிருந்த பிரார்த்தனை கயிறுகளையும் கத்தரியால் வெட்டிய பின்னரே தேர்வு எழுத அனுமதித்தனர்.
ஜீன்ஸ் கூடாது
மாணவர்கள் அரைக்கை சட்டை, சாதாரண செருப்பு, ஜூன்ஸ் பேண்ட், மருத்துவர்கள் அனுமதித்த கண் கண்ணாடி ஆகியவை அணிந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர். தேர்வு அறைக்குள் செல்போன், கேமரா, கால்குலேட்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.
கடும் எரிச்சலில் மாணவ, மாணவியர்
இந்த கெடுபிடியால் பல மாணவிகள் கோபத்துடனும், எரிச்சலுடனும் தேர்வு எழுத சென்றதை பார்க்க முடிந்தது. இதுகுறித்து அவர்கள் கூறுகையில் நிபந்தனைகள் தேவையானது தான். ஆனால் துப்பாட்டவை கூட கொண்டு செல்ல தடை விதித்ததை என்னவென்று சொல்வது என வேதனை தெரிவித்தனர்.