இலவச மிக்சி வழங்குவதில் தள்ளு முள்ளு - தாமதமானதால் பொதுமக்கள் கொதிப்பு
நெல்லை: நெல்லையில் இலவச மிக்சி , கிரைண்டர் வழங்குவதற்காக பொதுமக்களை நீண்ட நேரம் காக்க வைத்ததால் பொதுமக்கள் கொதிப்பில் இருந்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாநகராட்சியில் விடுபட்ட பகுதிகளுக்கு இலவச மிக்சி, கிரைண்டர் வழங்கும் பணி நடந்து வருகிறது. இதில் 25வது வார்டுக்கு வழங்கும் பணி பாளை பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் பள்ளியில் நடந்தது. இதையடுத்து காலை முதலே தனியார் பள்ளி முன்பு பொதுமக்கள் திரண்டனர். ஆனால் அவர்களை உள்ளே விடாமல் கேட்டை பூட்டப்பட்டது.
இதையடுத்த கவுன்சிலர் மூலம் டோக்கன் பெறப்பட்டு பொதுமக்கள் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்தனர். நீண்ட நேரம் ஆகியும் யாரும் வரதாததால் பொதுமக்கள் கோபத்தில் சத்தம் போட துவங்கினர். இதனால் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் கலெக்டர், முத்துகருப்பன் எம்பி வந்து 5 பேருக்கு கிரைண்டர், மிக்சி கொடுத்து விட்டு சென்றே பிறகு கேட் திறக்கப்பட்டது. இதில் பொதுமக்கள் ஓட்டு மொத்தமாக முண்டியத்து உள்ளே சென்றனர். இதனால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
தள்ளுமுள்ளு ஏற்பட்டதை அடுத்து போலீசார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பொதுமக்களை வரிசையில் நிற்க வைதது பொருட்களை வாங்க செய்தனர். நீண்ட நேரம் காக்க வைத்து பொருட்களை வழங்கியதால் பொதுமக்கள் கொதிப்பில் இருந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.