நெல்லையில் கடற்கரைப் பகுதிகளில் வெடிகுண்டு இருப்பதாகத் தகவல்: விடிய விடிய போலீஸார் தீவிர சோதனை
நெல்லையில் கடற்கரைப் பகுதிகளில் வெடிகுண்டு இருப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து போலீஸார் தீவிர சோதனை நடத்திவருகின்றனர்.
நெல்லை : நெல்லை மாவட்டம் கூத்தன்குளத்தில் வெடிகுண்டு பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து அங்கு போலீசார் விடிய விடிய தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே கூத்தன்குளம் கடற்கரை கிராமம் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் இங்கு நடந்த திருமணத்தின் போது, அங்குள்ள வீட்டில் ஒரு கோஷ்டியினர் நாட்டு வெடிகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து அப்போதைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விக்ரமன் உத்தரவின் பேரில் போலீசார் கடற்கரை ஓரங்களில் அதிரடி சோதனை நடத்தி புதைக்கப்பட்டிருந்த ஏராளமான நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றினர்.
இதுதொடர்பாக அப்போது பலர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இரு தரப்பினர் இடையே மீண்டும் மோதல் வரலாம் என்பதால் டிஜிபி தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, சமாதானம் செய்து வைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது மீண்டும் கூத்தன்குளம் கடற்கரை பகுதியில் நாட்டு சிலர் வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருப்பதாக வள்ளியூர் டிஎஸ்பி கனகராஜூக்கு ரகசியத் தகவல் கி்டைத்தது.
இதையடுத்து நெல்லை மாவட்ட எஸ்.பி அருண்சக்தி குமார் உத்தரவின் பேரில் 50 போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர் அடங்கிய குழுவினர் அங்கு விரைந்து சென்று மாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
அங்குள்ள உள்ள சமுதாயக் கூடம், கல்லறைத்தோட்டம், கடற்கரைப் பகுதியில் நிலத்தில் நாட்டு வெடிகுண்டுகள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதா என்றும் தோண்டி பார்த்து சோதனை நடத்தி வருகின்றனர்.