நெல்லையில் தனியார் பஸ் கவிந்து விபத்து; 3 பேர் பலி – 10 பேர் படுகாயம்
நெல்லை: திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அருகே காவல்கிணறில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூருக்கு தனியார் சொகுசு பேருந்து (கே.ஏ. 51-9852) வியாழக்கிழமை இரவு புறப்பட்டது. இதில் டிரைவர், கிளீனருடன் 16 பயணிகள் இருந்தனர்.
இரவு 11 மணிக்கு பணகுடி அருகேயுள்ள காவல்கிணறு பகுதியில் வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் கவிழ்ந்தது. பஸ்சுக்குள் சிக்கி மூன்று ஆண் பயணிகள்ள் பலியாகினர். இரண்டு பேருக்கு கை துண்டிக்கப்பட்டது. அவர்களது சடலம் பேருந்தின் உதிரிபாகங்களுக்குள் சிக்கியதால் உடனடியாக மீட்கமுடியவில்லை.
விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சம்பவ இடத்தில் பணகுடி போலீஸாரும், தீயணைப்பு வீரர்களும் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.