தொடர் மழையால் கந்தலான நெல்லை- தென்காசி சாலை; மக்கள் அவதி
நெல்லை: நெல்லை தென்காசி சாலையில் மழையால் எங்கு பார்த்தாலும் குண்டும், குழிகளுமாக கந்தலாக காட்சி அளித்து வருவதால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் தென்காசி முக்கிய நகரமாக செயல்படுகிறது. இங்கு மாவட்ட தலைமை மருத்துவமனை சுகாதார இணை இயக்குனர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அலுவலங்கள் இயங்கி வருகின்றன. தென்காசியை அடுத்துள்ள குற்றாலம் சுற்றுலா பயணிகளின் சொர்க்கமாக கருதப்படுகிறது.
இங்கு பருவமழை காலங்களில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டும், மேலும் ஐந்தருவியில ஈக்கோ பார்க் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சாதாரண நாட்களிலும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவார்கள். இது மட்டுமல்லாது தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கேரள மாநிலம் புனலூர், கொல்லம் உள்ளி்ட்ட இடங்களுக்கு ஏராளமான லாரிகளும் செல்லும்.
இவை தென்காசியை கடந்து தான் செல்கின்றன. செங்கோட்டையில் இயங்கி வரும் மர அறுவை ஆலைகள் பல வெளிநாடுகளில் இருந்து மரங்களை தூத்துக்குடியில் இருந்து தென்காசி வழியாகத்தான் இங்கு கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை சீசன் முடிந்த பிறகும் விட்டு விட்டு பெய்து வருவதால் நெல்லையிலிருந்து தென்காசி செல்லும் சாலை பல இடங்களில் பெயர்ந்து விட்டன. இந்த பள்ளத்தால் வாகன ஓட்டிகளால் வாகனத்தை சரியாக ஓட்ட முடியவில்லை. பெரிய வகை குழிகள் கிடப்பதால் இந்த பள்ளத்தில் சிறிய வகை கார்கள் விழுந்து சேதம் அடைந்து வருகின்றன.
பல பஸ்கள் இந்த பள்ளதால் பழுதாகி சாலையில் நிற்கின்றன. அரசு நிர்வாகம் இதை சரிசெய்யாமல் வேடிக்கை பார்த்து வருவதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோபத்தில் இருந்து வருகின்றனர். அடுத்து போராட்டத்தில் குதிக்க ஆலோசனை நடத்தி வருகின்றனர்.