நெல்லை பஜாரில் குத்தாட்டம் போடும் 'குடி'மகன்கள்- பதறும் மாணவிகள்
நெல்லை: நெல்லை மெஞ்ஞானபுரம் பஜாரில் குடிபோதையில் குடிமகன்கள் குத்தாட்டம் போடுதால் அந்த வ|ழியாக செல்லும் மாணவிகள் அச்சத்தில் உள்ளனர்.
நெல்லை மெஞ்ஞானபுரத்தில் 2 மேல்நிலைப்பள்ளி, பெண்கள் கல்வியியல் கல்லூரி, ஆங்கில பள்ளி மற்றும் துவக்கப்பள்ளி மறும் அரசு அலுவலகங்கள் உள்ளன. இந்த மெஞ்ஞானபுரத்தை சுற்றிலும் 100க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இப்பகுதியை சேர்ந்த மக்கள் எந்த ஒரு தேவையானாலும் மெஞ்ஞானபுரத்திற்கு வரவேண்டிய நிலை உள்ளது.
பொதுவாக காலை, மாலை நேரங்களில் மெஞ்ஞானபுரம் பஜாரில் பெண்கள், மாணவ, மாணவிகள் கூட்டம் அதிகமாக காணப்படும். கடந்த சில நாட்களாக பஜாரில் 'குடி'மகன்கள் தொல்லை அதிகரித்துள்ளது. அப்பகுதியில் பார் மூடப்பட்டுள்ளதால் பொது இடங்களில் பஜாரில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களின் மறைவில் மது அருந்தி வருகின்றனர். அவர்கள் போதையில் பெண்கள் அதிகம் இருக்கும் பகுதியில் அரைகுறை ஆடையுடன் உலா வருகின்றனர்.
மேலும் போதை ஆசாமிகள் அசிங்கமாக பேசி திரிகின்றனர். பின்னர் அங்கேயே சுயநினைவின்றி கீழே விழுந்து விடுகின்றனர். சில சமயங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் நின்று குத்தாட்டம் போடுகின்றனர். இந்த நிலையில் மாலை வேலைகளில் போதை ஆசாமி ஒருவர் கெட்ட வார்த்தைகளால் பேசியபடி அரைகுறை ஆடையுடன் மாணவிகள் நிற்கும் பகுதிகளில் சென்று வருவதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு நின்ற பெண்களும் மாணவ, மாணவிகளும் ஓட்டம் பிடிப்பதாக கூறப்படுகிறது.
இதை கண்டித்து கடும் நடவடிக்கை எடுக்க வியாபாரிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.