விபத்தில் உயிரிழந்த அப்பா... எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்காக மகனிடம் மறைத்த தாய்!
நெல்லை: மகனின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, மனதைக் கல்லாக்கிக் கொண்டு விபத்தில் தந்தை உயிரிழந்த தகவலை மறைத்து, அவரை எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத வைத்துள்ளார் நெல்லையைச் சேர்ந்த பெண் ஒருவர்.
நெல்லை டவுன் பகுதியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (47), திண்டுக்கல் அருகே குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கு மகேஷ்வரி என்ற மனைவியும், விஸ்வா என்ற மகனும் உள்ளனர். விஷ்வா தற்போது எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதி வருகிறார்.
பழைய கார்களை வாங்கி விற்பனை செய்து வந்த முத்துகிருஷ்ணன், நேற்று முன்தினம் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலை மிகவும் மோசமானது.
இந்நிலையில், இந்த விவகாரம் தனது மகனுக்கு தெரிய வந்தால், அவனால் தேர்வை சரிவர எழுத முடியாது என எண்ணினார் மகேஸ்வரி. எனவே, அப்பாவின் உடல்நிலை முன்னேறி வருவதாக பொய் கூறி, மருத்துவமனையில் இருந்து மகனை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் முத்துகிருஷ்ணன். இதனால் அதிர்ச்சியடைந்த மகேஸ்வரி, தனது மகனின் தேர்வை மனதில் கொண்டு, மனதை கல்லாக்கி இந்த விசயத்தை அவரிடமிருந்து மறைக்க முடிவு செய்தார்.
அதன்படி, விரைந்து வீட்டிற்குச் சென்ற மகேஸ்வரி மகனிடம், ‘‘அப்பா நன்றாக இருக்கிறார். ஆனால் அவருக்கு காயம்பட்ட தகவல் கிடைத்தவர்கள் வீட்டுக்கு நலம் விசாரிக்க வருவார்கள். இது உன்னுடைய படிப்புக்கு தொந்தரவாக இருக்கும். அதனால் அடுத்த தெருவில் இருக்கும் நண்பனின் வீட்டுக்கு சென்று படி. இரவு அங்கேயே தங்கிவிட்டு பள்ளிக்கு செல்' என உணவு, உடை கொடுத்து அவரை அனுப்பி வைத்தார்.
அதன்படியே விஷ்வாவும் தனது நண்பர் வீட்டில் தங்கிப் படித்து நேற்று தேர்வெழுதினார். பின்னர் வீடு திரும்பிய பின்னரே அவருக்கு, தன் தந்தை உயிரிழந்த தகவல் தெரிய வந்தது. இதனால் விஷ்வா அதிர்ச்சியடைந்தார்.
இதற்கிடையே முத்துகிருஷ்ணனின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து சொந்த ஊரான நெல்லை டவுனுக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் விஸ்வாவும் அங்கு அழைத்து செல்லப்பட்டார்.
மகன் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத வேண்டும் என்பதற்காக, மனதை கல்லாக்கிக்கொண்டு தன்னுடைய கணவர் விபத்தில் இறந்ததை மறைத்த மகேஸ்வரியின் செயல், உறவினர்கள் உள்பட அனைவரின் நெஞ்சையும் உருக்கியது.