ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் பாஜகவில் இன்று இணைகிறார் நடிகர் நெப்போலியன்!
சென்னை: தனது ஆதரவாளர்கள், ரசிகர் மன்றத்தினருடன் நாளை பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சரும் நடிகருமான நெப்போலியன்.
தமிழகத்தில் கட்சியை வலுவாக்கும் முயற்சிகளில் தீவிரமாக உள்ள பாரதிய ஜனதா கட்சி.
இத்தனை நாளும் கட்சியை பலப்படுத்த ரஜினிகாந்துக்கு தொடர்ந்து அழைப்பு விடுத்து வந்தனர். ஆனால் அவர் பாஜவுக்கு வர மறுத்துவிட்ட நிலையில், அடுத்த நிலையில் உள்ள முக்கிய தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள், திரையுலகப் பிரமுகர்களை குறிவைத்தது பாஜக.
திமுக சார்பில் மத்திய அமைச்சராக பதவி வகித்தவரும், பிரபல நடிகருமான நெப்போலியனிடம் பேசி அவரை பாஜகவில் சேர அழைப்பு விடுத்தார் பாஜக தலைவர் அமித் ஷா. திமுகவிலிருந்து ஒதுங்கியிருக்கும் நெப்போலியனும் இதற்கு சம்மதித்துவிட்டார்.
நாளை காலை 10 மணிக்கு அவர் கமலாலயத்தில் அமித் ஷாவைச் சந்தித்து கட்சியில் இணைகிறார்.
இதுகுறித்து நெப்போலியன் ஒன்இந்தியா செய்தியாளரிடம் பேசுகையில், "ஆமாம், நாளை கட்சியில் இணையப்போவது உண்மைதான். என் ரசிகர் மன்ற நிர்வாகிகள், ஆதரவாளர்களுடன் இணையப் போகிறேன். இன்று நடக்கும் பொதுக்கூட்டத்தில்தான் சேர அழைத்தார்கள். ஆனால் எனது ரசிகர் மன்றத்தினர் பல்வேறு பகுதியிலிருந்து வந்து சேர கால அவகாசம் தேவை என்பதால் நாள் பாஜக தலைவர் அமித் ஷா முன்னிலையில் கமலாலயத்தில் இணைகிறேன்," என்றார்.
முன்னதாக நேற்று மாலையில் தமிழக பொறுப்பாளர் முரளிதரராவ், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நெப்போலியன் வீட்டுக்கு வந்து அவரைச் சந்தித்து, முறைப்படி கட்சியில் சேர அழைப்பு விடுத்தனர்.
அடுத்த தலைவர்?
நெப்போலியன் பாஜகவில் இணைவது அரசியல் வட்டாரத்தில் புது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சியை பலப்படுத்த, நெப்போலியனை கட்சியின் தலைவராக்கக் கூடும் என்ற பேச்சு அடிபடுகிறது.
திமுகவில் இருந்த போதே க்ளீன் இமேஜ் மற்றும் மக்களைத் திரட்டும் சக்தி மிக்கவராகத் திகழ்ந்தார் நெப்போலியன். மத்திய அமைச்சராக நான்கு ஆண்டுகளுக்கும் மேல் இருந்தவர் என்பதால் டெல்லி வட்டாரத்திலும் அவருக்கு நல்ல அறிமுகம் உண்டு. காவி இமேஜ் இல்லாதவர் என்பதால், அனைத்து வகுப்பினரிடையேயும் அவருக்கு நல்ல மதிப்பு இருப்பதால், நெப்போலியன் வரவு பாஜகவின் நிறத்தை தமிழகத்தில் மாற்றும் என நம்புகிறார்கள்.