மேகி தான் "அப்படி" ! நெஸ்லே பால் பவுடர் பாதுகாப்பானது தான்! ஆய்வில் முடிவு !!
கோவை: நெஸ்லே நிறுவனத் தயாரிப்பான மேகி பாதுகாப்பு ஆய்வில் சிக்கி சின்னாபின்னமாகி விட்ட நிலையில், அந்த நிறுவனத்தின் தயாரிப்பான பால் பவுடரில் புழு நெளிந்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில் அந்த நிறுவன பால் பவுடர் மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தியதில், அவை பாதுகாப்பானவை என்றும், உண்ணத்தக்கது என்றும் முடிவில் தெரியவந்துள்ளது.
கோவை புலியகுளம் பகுதியை சேர்ந்த பிரேம் ஆனந்த் என்ற கால் டாக்ஸி டிரைவர் கடந்த ஏப்ரல் மாதம் வாங்கிய பால் பவுடரில் புழுக்கள் இருந்ததையடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அது உண்ணத்தகுதியற்றது எனவும், புழுக்கள் இருந்ததும் உறுதியானது.
இதையடுத்து அவர் உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். தொடர்ந்து, புகார் அளிக்கப்பட்ட உணவு பாக்கெட்களில் உள்ள கணினி குறியீட்டு எண்களை கொண்டு, இதே குறியீட்டு எண் வரிசையில் உள்ள மற்ற பாக்கெட்களை சோதனை செய்ய உணவு பாதுகாப்பு அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இந்நிலையில், சென்னை உணவு பாதுகாப்பு துறை ஆணையர் நெஸ்லே நிறுவன பால் பாக்கெட்டுகளின் மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கோவை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பரிசோதனையின் முடிவில், அவை பாதுகாப்பானதாகவும், உண்ணத்தக்கதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்த கோவை உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை, உணவு பாதுகாப்பு பிரிவு நியமன அதிகாரிகள், புகாரின் அடிப்படையில் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதாகவும், அதன் முடிவில், அவை பாதுகாப்பானதாகவும், உண்ணத்தக்கதாகவும் தெரியவந்துள்ளது என்றும் தெரிவித்தனர்.