பகத்சிங், நேதாஜி, பிரபாகரன் பிறந்த ஊரின் மண்ணை பாதுகாத்து வைத்திருக்கும் வைகோ
திருநெல்வேலி: விடுதலைப் போராட்ட வீரர் பகத்சிங், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஆகியோர் பிறந்த மண்ணை பாதுகாத்து வைத்திருக்கும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிடம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த ஊரின் மண் வழங்கப்பட்டது
நேதாஜியின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மதிமுக சார்பில், திருநெல்வேலி பாளையங்கோட்டையில் நேற்று 23.01.2015 நடைபெற்றது.
இதில் வைகோ கலந்துகொண்டு பேசினார். மனித உரிமைப் போராளி டெபி பிரசாத் புருஷ்டி அவர்களும் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
நேதாஜி பிறந்த மண்
பிறந்தநாள் விழாவில் நேதாஜி பிறந்த ஊரின் மண்ணை வைகோவிடம் வழங்கினார் டெபி பிரசாத் புருஷ்டி.
பகத்சிங் - பிரபாகரன்
ஏற்கனவே பகத் சிங் பிறந்த ஊரின் மண்ணையும், தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்த வவுனியா மண்ணையும் சேகரித்து வந்து பாதுகாத்து வைத்திருக்கிறேன். அதுபோன்று இந்த மண்ணும் பாதுகாப்பாக வைக்கப்படும் என்று கழகப்பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.
புனித மண் யாத்திரை
முன்னதாக மனித உரிமைப் போராளி டெபி பிரசாத் புருஷ்டி நேதாஜி பிறந்த ஊரான கட்டாக்கின் புனித மண் அடங்கிய கலசம் கடந்த 16ஆம் தேதி முதல் யாத்திரையாக பயணித்து வியாழக்கிழமையன்று சென்னை வந்தது. விமான நிலையத்தில் புனித மண்ணிற்கு வைகோ உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்பு கொடுத்தனர்.
நேதாஜி மாளிகையில்
1939-ஆம் ஆண்டு செப்டம்பர் 3,4,5 ஆகிய மூன்று நாட்கள் சென்னை ராயப்பேட்டை பாரதி சாலையில் உள்ள பழமையான `காந்தி பீக்' மாளிகையில் நேதாஜி தங்கியிருந்தார். இந்த மாளிகைக்கும் சென்ற வைகோ, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.