சேலம் சிறைக்குள் தாக்கப்பட்டாரா சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ்? கை கோர்க்கும் நெட்டிசன்கள்
சேலம்: சமூக ஆர்வலரான பியூஷ் மனுஷின் போராட்டத்தை ஒடுக்குவதற்காக சிறைக்குள் போலீசார் கண்மூடித்தனமாக தாக்கினர் என்று குற்றம்சாட்டியுள்ளார் அவரின் மனைவி மோனிகா.
சேலம், முள்ளுவாடி கேட் பகுதி ரயில் பாதையில், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் மேம்பாலம் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 8ம் தேதி போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் கைது செய்யப்பட்டு நகரிலுள்ள மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பியூஷ் மனுஷுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இந்த நிலையில், அவரது மனைவி மோனிகா நிருபர்களிடம் கூறுகையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள எனது கணவரை சந்திக்கச் சென்றபோது, அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தார்.
எனது கணவரைக் கட்டிப்போட்டு, 30 சிறைக் காவலர்கள் அவரைத் தாக்கியுள்ளனர். இது மனித உரிமையை மீறியச் செயல். எனது கணவரை சந்திக்கச் செல்லும் போதெல்லாம் தமிழில்தான் பேச வேண்டும் என்றும், ஹிந்தியில் பேசக் கூடாது என்றும் சிறைத் துறையினர் மிரட்டுகின்றனர். எனது கணவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றார்.
இதனிடையே சமூக போராட்டத்திற்காக பியூஷ் மனுஷ் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதை கண்டித்து, #stand_with_piyush என்ற பெயரில் ஹேஷ்டேக் உருவாக்கி டிவிட்டர், பேஸ்புக்கில் பொதுமக்கள் ஆதரவு அளிக்க தொடங்கியுள்ளனர்.