ரஜினி சார்... சீருடையில் போலீஸ் செய்யும் அத்துமீறல்களைத் தடுக்க சட்டம் வேண்டாமா?
Recommended Video
சென்னை: சென்னை ஐபிஎல் போராட்டத்தின்போது போலீஸ் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு ரஜினிகாந்த் மிகக் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்ததுடன், சீருடையில் உள்ள போலீசாரைத் தாக்குவதைத் தடுக்கும் வகையில் கடும் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று ட்வீட் செய்துள்ளார்.
அவரது இந்த திடீர் ட்விட்டர் கண்டனம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஒரு சிலர் ரஜினிகாந்த் கருத்தை ஆதரித்திருந்தாலும், பெரும்பாலானோர் கடுமையான எதிர்வினை ஆற்றியுள்ளனர்.
போலீசாரை பொதுமக்கள் தாக்கும் சம்பவம் அத்திப்பூத்த மாதிரி் எங்கோ ஒன்றிரண்டுதான் நடக்கிறது. ஆனால் அப்பாவி பொதுமக்களை சீருடை அணிந்த தைரியத்தில் போலீசார் தாக்குவதும், கொடுமைப்படுத்துவதும் அன்றாட நிகழ்வாகத் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.
கிருஷ்ணகிரியில் ஒரு ஆசிரியையையும் அவர் கணவரையும் பொதுமக்கள் முன்னிலையில் ஒரு போலீஸ் கும்பலே கண்மூடித்தனமாகத் தாக்கியது. அவர்கள் செய்த ஒரே தவறு, போலீசை எதிர்த்துப் பேசிவிட்டார்களாம்.
அண்மையில் திருச்சியில் வாகனத்தில் சென்ற கர்ப்பிணிப் பெண்ணை நடுரோட்டில் எட்டி உதைத்துக் கொன்றதும் இதே சீருடை அணிந்த போலீஸ்தான்.
சில நாட்களுக்கு முன்பு ஒரு தாயின் கண்முன்னே மகனை கொலைவெறித்தனமாக கட்டிவைத்து அடித்தது இதே போலீஸ். காரணம், லஞ்சம் தர மறுத்தது. அந்தத் தாயையும் விட்டுவைக்காமல் அடித்துத் தாக்கினர்.
மெரினாவில் அறவழியில் நடந்த, உலகமே பெரும் அதிசயமாகப் பார்த்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை வன்முறைக் களமாக மாற்றியதும், அந்த போராட்ட மக்களுக்கு ஆதரவளித்த மீனவர் குப்பத்தையும் மீன் கடைகளையும் தீயிட்டுக் கொளுத்தியதும் இதே சீருடை போலீஸ்தான். ஏழை மக்களின் வாழ்வாதாரமாக இருந்த ஆட்டோக்களைக் கூட இதே சீருடை போலீஸ்தான் தீவைத்துக் கொளுத்தியது. போலீசாரின் இந்த எல்லா அக்கிரமங்களுக்கும் கைவசம் வீடியோ ஆதாரங்கள் உள்ளன.
கதிராமங்கலம், நெடுவாசல், இடிந்தகரை என எங்கெல்லாம் மக்கள் நியாய வழியில் போராட்டங்கள் நடத்தினார்களோ, அங்கெல்லாம் அநியாய அராஜக வழியைக் கையாண்டுதான் போலீசார் கட்டுப்படுத்தினர்.
குற்றம், அநீதியைத் தட்டிக் கேட்பார்கள் என்று நம்பித்தான் அப்பாவி மக்கள் போலீஸாரை நாடிப் போகிறார்கள். ஆனால் ஸ்டேஷனுக்கு உள்ளே போனால், போலீசை விட சண்டைக்காரனே மேல் எனும் அளவுக்கு கேவலமான முறையில்தான் பல போலீஸ்காரர்கள் நடந்து கொள்கிறார்கள் என்பது பொதுமக்கள் வைக்கும் பரவலான குற்றச்சாட்டு. நாட்டில் இருக்கும் ஒரு சில நல்ல போலீசார் விதிவிலக்கு.
"அரிதினும் அரிதாகவே பொதுமக்களிடம் அடி வாங்குகிறார்கள் போலீசார். ஆனால் எப்போதும் போலீசாரிடம் அப்பாவி பொதுமக்கள் படாத பாடுபடுகிறார்கள். அரிதினும் அரிதாக நடக்கும் விஷயத்துக்கு சட்டத்தைக் கடுமையாக்க வேண்டும் என்கிறீர்களே... அன்றாடம் போலீசாரிடம் அல்லல்படும் மக்களைக் காக்க எந்த மாதிரி சட்டம் கொண்டுவரப் போகிறீர்கள் ரஜினிகாந்த் அவர்களே?"
- ரஜினிகாந்தின் ட்விட்டை மையமாக வைத்து இந்தக் கேள்வியைத்தான் வெவ்வேறு வார்த்தைகளில் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் வலைவாசிகள்!