மேடை நாகரிகம் தெரியாமல் உளறியதால் நெட்டிசன்களிடம் செமையா வாங்கிக் கட்டும் ராகவா லாரன்ஸ்!
அரியலூர் அனிதா நினைவு நூலக நிகழ்ச்சியில் மேடை நாகரிகம் தெரியாமல் பேசி வாங்கி கட்டுகிறார் நடிகர் ராகவா லாரன்ஸ்
Recommended Video
சென்னை: அரியலூர் அனிதா நினைவு நூலகம் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் மேடை நாகரிகமே இல்லாமல் அரசியல் பேசுவதாக நினைத்துக் கொண்டு உளறிக் கொட்டிய நடிகர் ராகவா லாரன்ஸுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
நீட் தேர்வு காவு கொண்ட அரியலூர் அனிதா நினைவாக அவரது சொந்த கிராமமான குழுமூரில் அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அதிமுக எம்.எல்.ஏ. ஆர்.டி.ராமச்சந்திரன், திமுக முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.எஸ். சிவசங்கர், நடிகர் ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அரசியல் வேறுபாடுகளை மறந்து அதிமுக, திமுகவினர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் ராகவா லாரன்ஸ் உளறிக் கொட்டியிருக்கிறார். அரசியல் பேசுவதாக நினைத்துக் கொண்டு ராகவலா லாரன்ஸ் மேடையில் பேசியதைக் கண்டித்து ஃபேஸ்புக்கில் புதுக்குடியான் என்பவர் போட்டுள்ள பதிவு:
குழுமூரில் அனிதா நினைவு நூலகம்
அரியலூர் மாவட்டம் குழுமூரில் இரண்டு நாட்களுக்கு முன்பு மருத்துவர் அனிதா நினைவு நூலகத்துக்கு அடிக்கல் நாட்டும் விழா நடந்தது. தமிழகத்தின் கடந்த 30 ஆண்டுகால வரலாற்றில் நடந்திருக்க வாய்ப்பில்லாத அரிய நிகழ்வாக, திமுக மாவட்டச் செயலாளர் தலைமையில் நடந்த இவ்விழாவில் அதிமுக மாவட்டச் செயலாளர் சிறப்புரை ஆற்றினார்.
அதிமுக, திமுக பிரமுகர்கள்
பலரைப் போலவே எனக்கும் ஆச்சரியம். யாராவது ஒருவர் மற்றொருவர் வந்துபோன பின்னர் தான் நிகழ்ச்சிக்கு வருவார் என நினைத்திருந்தேன். ஆனால், திமுகவின் அரியலூர் மாவட்டச் செயலாளர் எஸ்எஸ் சிவசங்கரும், அதிமுகவின் மாவட்டச் செயலாளரும் குன்னம் எம்எல்ஏவுமான ஆர்.டி.ராமச்சந்திரனும் ஒரே மேடையில் அருகருகே உட்கார்ந்து கைகுலுக்கி சகஜமாக பேசிக் கொண்டிருந்தனர். இரு கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்களும் இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.
ராகவா லாரன்ஸ் உளறல்
'எதிரி'க் கட்சிப் போலவே இருந்த இந்த இரண்டு எதிர்க்கட்சிகளின் தொண்டர்களும் பொறுப்பாளர்களும் ஒரே மேடையில் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தது எத்தகைய சிறப்பு! இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நடிகர் ராகவா லாரன்ஸ் கொஞ்சமும் சபை நாகரீகம் இல்லாமல் "இலவசமாக மிக்ஸி, கிரைண்டர் கொடுக்கும் கட்சிக்கு ஓட்டுப் போடாதீங்க! இலவசமாக கல்வி, சுகாதாரம் கொடுக்கும் கட்சிக்கு ஓட்டுப் போடுங்க" என்று பெரிய ‘இவர்' போல பேசியிருக்கிறார். மேடையில் இரண்டு கட்சிகளின் தலைவர்கள் இருக்கிறார்களே, நடந்து கொண்டிருப்பது அனிதாவின் நினைவைப் போற்றும் நிகழ்வாயிற்றே, என்று எந்த சங்கோஜமும் இல்லாமல் பேசியிருக்கிறார் ராகவா லாரன்ஸ்! இப்படிப்பட்ட கோஷ்டி தான், ரஜினியை முதல்வராக ஆக்கி ‘சிஸ்டத்தை' சரிசெய்ய போகிறதாம். காலக்கொடுமை!
நீட் பற்றி வாய் திறக்காத ராகவா லாரன்ஸ்
ராகவா லாரன்ஸ்க்கு அவ்வளவு தைரியம் இருக்குமானால், இதுபோன்ற கருத்தை ஜெயலலிதா உயிருடன் இருந்த காலகட்டத்தில் சொல்லியிருக்கலாமே! சொல்லியிருந்தால் தெரிந்திருக்கும் சங்கதி! இவ்வளவு பேசத் தெரிந்த லாரன்ஸ், அனிதாவின் உயிரைப் பறித்த ‘நீட்' பற்றியும் அதனை வலுக்கட்டாயமாக தமிழகத்தின் மீது திணித்த மத்திய அரசு பற்றியும் வாய்த் திறக்கவில்லையாம்! அனிதா நினைவைப் போற்றும் நிகழ்ச்சியில், அரசியல் பேசித் தான் தீருவேன் என்பது லாரன்ஸின் கருத்தாக இருந்தால், அவர் நியாயமாக நீட் தேர்வை எதிர்த்து தானே பேசியிருக்க வேண்டும்!
இலவச கல்வி, சுகாதாரம்
அதைவிடுத்து, தமிழகத்தில் இப்போது என்னவோ இலவச கல்வியும், இலவச மருத்துவமும் இல்லாதது போன்று பேசியிருக்கிறார். தமிழகத்தில் தொடக்கக்கல்வியில் இருந்து உயர்கல்வி வரை இலவசம் உண்டு. ஆரம்ப சுகாதாரநிலையத்தில் இருந்து உயர்சிகிச்சை வரை இலவசம் உண்டு. லாரன்ஸ்க்கு இது தெரியாதா? கடந்த மாதம், அரியலூர் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பிரியா அவர்கள் கூட அரியலூர் அரசு மருத்துவமனையில் தான் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்!
ரஜின், ராகவா லாரன்ஸ்
இந்த பட்ஜெட்டில் தான், மத்திய அரசு மருத்துவக் காப்பீடுத் திட்டம் பற்றி அறிவித்திருக்கிறது. ஆனால், இத்திட்டம் தமிழகத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே செயல்பாட்டுக்கு வந்துவிட்டது. ஜெயலலிதாவுக்கு பயந்து இலவசங்கள் குறித்து பேசாமல் இருப்பதும், மோடிக்கு பயந்து நீட் பற்றி பேசாமல் இருப்பதும் தான், ராகவா லாரன்ஸ் கடைபிடிக்கும் ‘ரஜினியிசமா'? சிஸ்டம் சரியில்லாமல் இருப்பது இந்தியாவிலா, தமிழ்நாட்டிலா? என்று செய்தியாளர்கள் லாரன்ஸின் அரசியல் தலைவரான ரஜினியிடம் ஒரு கேள்வியை கேட்டார்கள். "தமிழகத்தில் தான் சிஸ்டத்தை சரிசெய்ய வேண்டியிருக்கிறது" என்று பதில் சொல்லியிருக்கிறார் ரஜினி! ரஜினி மற்றும் ராகவா லாரன்ஸ் ஆகியோரின் தைரியத்தை வியந்து பேசிக்கொண்டு பக்கோடா சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர் அரியலூர் மாவட்ட மக்கள் என்று அந்தப் பதிவில் போடப்பட்டுள்ளது.