வெள்ள நிவாரண நிதி விநியோகத்தை சகாயத்திடம் ஒப்படைக்கலாம்.. சமூக வலைதளத்தில் மக்கள் குரல்
சென்னை: தமிழக வெள்ள நிவாரண நிதி விநியோகத்தை ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திடம் ஒப்படைத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிதி முறையாக போய்ச் சேரும் என்று சமூக வலைதளத்தில் குரல் கிளம்ப ஆரம்பித்துள்ளது.
கடலூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தூத்துக்குடி உள்பட பல மாவட்டங்கள் பெரு மழை மற்றும் வெள்ளத்தால் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன.
இங்கு வெள்ளத்தால் லட்சோபம் லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நிவாரண உதவிகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், இவை முறையாக பாதிக்கப்பட்டோருக்குப் போய்ச் சேருமா என்று பலரும் சந்தேகம் எழுப்பி வருகின்றனர். குறிப்பாக எதிர்க்கட்சிகள் பல சந்தேகங்களை எழுப்பி வருகின்றன.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திடம் இந்த பணியை ஒப்படைக்க வேண்டும். அப்போதுதான் பாதிக்கப்பட்டோருக்கு முறையாக நி்வாரண உதவிகள் போய்ச் சேரும் என்று கருத்து கிளம்ப ஆரம்பித்துள்ளது. பலரும் இந்தக் கோரிக்கையை வழி மொழிந்து ஆதரவுக் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
மதுரை மாவட்ட கிரானைட் மோசடியை அம்பலப்படுத்தியவர் சகாயம். பின்னர் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அதுகுறித்து விசாரணை நடத்தினார் என்பது நினைவிருக்கலாம். நேர்மையான அதிகாரியான சகாயம், அந்த நேர்மைக்காகவே பலமுறை டிரான்ஸ்பர் செய்யப்பட்டு அலைக்கழிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.