நியூட்ரினோ: சாண்டியை சந்திக்கிறார் வைகோ.. கேரள மக்களும் எதிர்க்க அழைப்பு!
தேனி: நியூட்ரினோ குறித்த ஆபத்துகளை பற்றி கேரள முதல்வர் உம்மன் சாண்டியையும், எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தனையும் சந்தித்து பேச இருப்பதாக ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். கேரளா மக்களும் இணைந்து நியூட்ரினோ திட்டத்தை எதிர்க்கவேண்டும் என்றும் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு விதிமுறைகளை மீறி தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளை கடந்த 37 நாட்களாக பணி செய்ய விடாமல் தடுத்து வருவதை கண்டித்தும், தேனி மாவட்டம் போடியில் அமையவுள்ள நியூட்ரினோ ஆய்வகத்தினை எதிர்க்கவும் ம.தி.மு.க கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் தேனி மாவட்டம் கம்பம் வ.உ..சி திடலில் அறப்போராட்டம் நடைபெற்றது.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், தன் உயிரை மாய்த்துக்கொண்ட ஜெயப்பிரகாஷ் நாராயணனின் தாயான சண்முக வடிவுக்கு சால்வை அணிவித்த வைகோ, ம.தி.மு.க கட்சியின் கம்பம் நகர பொதுச்செயலாளரான மறைந்த சத்திய சீலனின் மனைவிக்கு ஐம்பதாயிரம் ரூபாயை வழங்கினார்.
தொடர்ந்து பேசிய வைகோ, ஐந்தாண்டுகளுக்கு முன்னர் முல்லைப்பெரியாறு பிரச்னைக்காக மதுரையிலிருந்து தொடங்கிய நடைபயணம் இந்த கூடலூர் நகரத்துல முடிஞ்சு அந்த மேடையில நான் பேச காத்துகிட்டிருந்தப்ப அ.தி.மு.க பொதுச்செயலாளர் எனக்கு போன் பண்ணி, 'உங்களுடைய முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள் !" என்று சொன்னார்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்துல கேரளாவுக்கு சில உண்மையான விசயங்கள் தெரிய வேண்டும் என்றுதான் அவர்களையும் கூப்பிட்டேன். முல்லைப் பெரியாறு அணையினால் கேரளாவுக்கு ஆபத்து வருமானால் நான் கண்டிப்பாக இந்த போராட்டத்திலே கலந்திருக்கவே மாட்டேன். ஆனால் உங்களுக்கு அதில் எந்த பிரச்னையும் இல்லை.
பென்னிகுக் பிறந்தநாளில்
இந்த வருட பொங்கல் ரொம்ப முக்கியமானது. காரணம் 15 ஆம் தேதி வரும் பொங்கல் பென்னிகுக்கோட பிறந்த நாளன்று வருவதான் சிறப்பு. முல்லைப் பெரியாறு அணையை பற்றி மலையாள மனோரமா பத்திரிகை திரித்து எழுதிவிட்டது. 152 அடியை தேக்கினா தேக்கடியில இருக்குற பெரும்பாலான ரிசாட்டுகள் தண்ணீரில் மூழ்கிடும். அதுதான் அவர்களின் பிரச்னையே.
தவறான செய்தி
நிலநடுக்கம் 7 ரிக்டர் அளவு வந்தாலும் அணைக்கு பிரச்னையில்லை. ஆனா ரிசாட்டுகள் காணாமல் போய்விடும். தமிழகத்திற்கு உட்பட்ட இடத்தை திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு சொந்தமானது என்று தவறாக ஆங்கிலேயர் அளந்ததுதான். அணை கட்டுவதற்கு குத்தகை பணமாக கொடுத்த பணத்தாசையினால்தான் இவ்வளவு பிரச்னைகளும் வந்துவிட்டது.
உரிமையை இழப்போம்
இந்த போராட்டத்தில் மீன்பிடி உரிமை, படகு உரிமையை எல்லாம் இழந்துட்டோம். இப்போ புதிதாக கையெழுத்து போட்டு அணைப்பகுதிக்கு போக வேண்டும் என்று கேரள அரசு சொல்கிறது. கடந்த சில நாட்களாக கையெழுத்து போட்டு செல்வதாக சொல்கிறார்கள். இப்படியே விட்டால் இந்த உரிமையும் நாம் இழந்ததாக மாறிடும்.
பாதுகாப்பு படை
அதோடு அங்கு இருக்கும் கேரள காவல்துறையினர்களுக்கு பதிலாக மத்திய பாதுகாப்பு படையினரை அனுமதிக்க வேண்டும். அதன்பின் அவர்களுக்கு பதிலாக தமிழக காவலர்களை நியமிக்க வேண்டும். இரண்டு மூறை தமிழகத்திற்கு சாதகமான தீர்ப்பு வந்தபோதும் புதிய அணைகட்ட ஆய்வு செய்ய அனுமதியை மத்திய சுற்றுச்சூழல் துறை கொடுத்திருப்பதன் மூலம் தமிழக - கேரள மக்களுக்கிடையே பிரச்னையை கிளப்ப நினைக்கிறது மத்திய அரசு.
முதலாளிகளின் ஆட்சி
மத்திய அரசு அதானிக்கு 6000 கோடி கடன் வழங்க இருப்பதாக மோடி கூறுகிறார். ஏற்கனவே அவருக்கு 60,000 கோடி கடன் இருக்கிறது. அதோடு பத்தாயிரம் கோடி கடன் இருக்கிறது. இது முதலாளிகளுக்கான ஆட்சி.
ஜனநாயக மரணம்
டெமாக்ரஷி, டிமாண்ட், டெமாக்ரபி என்ற பெயரில் நம் நாட்டில் உள்ள மூன்று டி-களை மோடி கூறுகிறார். ஆனால் நடப்பதோ ஆபத்து, அழிவு, ஜனநாயக மரணம் ஆகியவை தான். நியூட்ரினோவும் மீத்தேன் திட்டம் வளர்ச்சிக்கான திட்டங்கள் என்றால் அதனை குஜராத்திலும், அகமதாபாத்திலும் கொண்டு வர வேண்டியதுதானே. வளர்ச்சி அவர்களுக்கு வேண்டாமா.
அணைகளுக்கு பாதிப்பு
போடி பகுதியில் செயல்படுத்த கூடிய திட்டத்தில் எட்டாயிரம் டன் கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன. பத்தாயிரம் டன் ஜெலட்டின் குச்சிகள் பயன்படுத்தபட்டு அதன் மூலம் ஒரு லட்சம் டன் தூசுகள் வெளியேற்றப்படுகின்றன.
இந்த நியூட்ரினோ திட்டத்தின் மூலம் முதலில் இடுக்கி அணை பாதிக்கப்படும். அதன் பின் முல்லைப் பெரியாறு அணையும் பாதிக்கப்படும்.
சாதி மதம் கடந்து
மத்திய அரசின் நயவஞ்சக செயலை கண்டித்து சாதி மதம் கடந்து போராடுங்கள். நியூட்ரினோ குறித்த ஆபத்துகளை பற்றி பேச திருவனந்தபுரம் சென்று உம்மன் சாண்டியை சந்திக்கிறேன். அடுத்து அச்சுதானந்தனையும் சந்தித்து பேச இருக்கிறேன். தமிழக முதல்வரான ஓ.பன்னீர்செல்வமும் எங்களுக்கு போதிய ஒத்துழைப்பு தரவேண்டும். நியூட்ரினோ திட்டம் வராமல் இருக்க கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று வைகோ கேட்டுக்கொண்டார்.