கும்பகோணம் மகாமகம்: அசத்தும் ஆப்ஸ் ... நகராட்சி மீது குவியும் புகார்கள்
கும்பகோணம்: தமிழகத்தின் மிகப்பெரும் ஆன்மீகத் திருவிழாவான மகாமகப் பெருவிழாவில் பங்கெடுக்கும் பக்தர்கள் பயனுறும் வகையில், பல்வேறு தகவல்களை உள்ளடக்கி இந்த ஆன்ட்ராய்டு ஆப்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் உள்ளாட்சித்துறை சார்பில் துப்புறவு பணிகளும், அடிப்படை வசதிகளும் மந்தகதியில் நடைபெறுவதாக பொதுமக்களிடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மகாமகம் வரலாறு, கும்பகோணம் கோயில்கள், கும்பகோணத்தைச் சுற்றியுள்ள கோயில்கள், தங்கும் விடுதிகள், உணவகங்கள், போக்குவரத்து வசதிகள், புகைப்படத் தொகுப்பு,செய்திகள், சிறப்பு ஏற்பாடுகள், மேப் மற்றும் முக்கிய தொலைபேசி எண்கள் போன்ற விரிவான தகவல்கள் அடங்கிய இந்தச் செயலி மகாமகப் பெருவிழாவில் பங்கெடுக்கும் பக்தர்களுக்கு மட்டுமன்றி, மகாமகத்தினையும், கும்பகோணத்தையும் பற்றி அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கும் இந்த ஆப்ஸ் பயனுடையதாக இருக்கும்.
கும்பகோணத்தில் மகாமகம் திருவிழா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெகுசிறப்பாக நிகழ்த்தப்படுவது வழக்கம். இந்த விழாவுக்கு இந்தியா முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். இவ்வருடம் கும்பகோண மகாமகப் பெருவிழா வரும் 13ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு ஆண்ட்ராய்ட் ஆப்ஸ் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆப்ஸை அரசுப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் பெருமாள் ராஜ் தலைமையிலான ஆசிரியர் குழு தயாரித்துள்ளதாகவும், இந்த ஆப்ஸ் மகாமகப் பெருவிழாவுக்கான தமிழக அரசின் அதிகாரபூர்வ ஆப்ஸ் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கும்பகோணம் மகாமகம்
இந்தியாவில் இந்துக்களின் புனித நீராடல் என்பதானது ஆறுகளில் மட்டுமே காணப்படும் நிகழ்வாகும். கும்பகோணத்தில் மட்டுமே உள்ள புனித நீராடல் வழக்கம் மகாமகக் குளத்தில் நீராடுவதைக் குறிக்கும். மகாமக திருக்குளம் உருவானது எப்படி, தலவரலாறு, தொடர்புடைய கோயில்கள், மாசிமகம் நீராடல், திருக்குள அமைப்பு, மகாமகம் 2016 பற்றிய குறிப்புகள் ஆப்ஸ் முகப்பில் மிளிர்கின்றன.
எத்தனை கோவில்கள்
கும்பகோணம் மற்றும் அதனைச் சுற்றிலும் உள்ள கோயில்களின் வரலாறு, திருவிழாக்கள், வழிபாட்டு நேரம், தொலைபேசி, அமைவிடம் உள்ளிட்டவை விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது. தகவல்கள், திருக்கோயில்கள் வழிகாட்டியின் உதவியுடன் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
தங்கும் விடுதிகள்
வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளுக்காக, அங்கே அமைந்துள்ள விடுதிகளின் முகவரி, தொலைபேசி மற்றும் இணையதள முகவரியோடு தரப்பட்டிருக்கிறது. விடுதிகளோடு, உணவகங்களின் பெயர்களும் தொகுக்கப்பட்டுள்ளன. சைவ உணவகம், அசைவ உணவகம் என்று தனித்தனியாகப் பிரித்திருக்கும் விதம் அற்புதம்.
போக்குவரத்து
முக்கிய விழாக்கள் நடைபெறும் நேரங்களில், போக்குவரத்துதானே மிகவும் முக்கியம்? செயலியில் போக்குவரத்துக்காகவும் தனிப் பகுதி அமைக்கப்பட்டுள்ளது. பொதுப் போக்குவரத்துகளான ரயில், அரசுப் பேருந்துகள், விரைவுப் பேருந்துகள், தனியார் பேருந்துகள் ஆகியவற்றுக்கான வழித்தடமும், ரயில் பேருந்து பெயர்களும், எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன. தனிப் போக்குவரத்தை விரும்புவர்களுக்கு, கால்டாக்ஸி விவரங்கள் மற்றும் அவற்றின் தொலைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளன.
தீர்த்த முன்பதிவு
விழாவில் கலந்து கொண்டால் போதுமா, தீர்த்தத்தைப் பெற வேண்டாமா என்பவர்களுக்காக, மகாமகம் விழா குறித்த சிறப்பு அரசு இணைய தளங்களின் முகவரியோடு, மகாமக தீர்த்தத்தை பெறுவதற்கான முன்பதிவு இணைப்பும் இங்கே காணப்படுகிறது. கோயில்களின் புகைப்படங்களும், படத்தொகுப்புகளுக்கான இடுகைகளும் இதில் இணைக்கப்பட்டுள்ளன.
எங்கே எப்படி போவது
கும்பகோணம் நகர வரைபடம் குறித்த கூகுள் மேப்புகளும், பேருந்து, கார், இரு சக்கர வாகனங்களுக்கான வழித்தடங்களும் தெளிவாக இணைக்கப்பட்டுள்ளன. பக்தர்களின் வருகை மற்றும் வெளியேறும் பாதைகளின் இணைப்புகளும் இதில் அடங்கும்.
மக்களுக்கு பயன்தரும் ஆப்ஸ்
இப்போது ஆண்ட்ராய்ட் தளத்தில் மட்டுமே இயங்கும் இந்த ஆப்ஸை விண்டோஸ் மற்றும் ஆப்பிள் தளத்தில் பயன்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர் ஆசிரியர் குழுவினர். ஆப்ஸ் வடிவமைப்பு அனைத்தும் கண்ணை உறுத்தாத வண்ணங்களில், தெளிவாக அமைக்கப்பட்டிருக்கிறது. அனைவரும் பயன்படுத்தக் கூடிய வகையிலும், எளிதாய்ப் புரியும் விதத்திலும் இருப்பது கூடுதல் சிறப்பு.
உள்ளாட்சித்துறை மீது புகார்
மகாமகத்துடன் தொடர்புடைய 17 கோயில்களில் இந்து அறநிலையத் துறை சார்பில் கடந்த நவம்பர் மாதமே கும்பாபிஷேகம் செய்துவிட்டனர். மகாமக குளத்தில் பக்தர்கள் மீது சுழல் தெளிப்பான்கள் மூலம் தண்ணீர் தெளிக்க பொதுப்பணித் துறை ஏற்பாடு செய்துவருகிறது. கும்பகோணம் முழுவதும் தெரு விளக்குகள் சரிசெய்யப்பட்டுள்ளன. பந்தோபஸ்து ஏற்பாடுகளில் போலீஸார் தீவிரமாக உள்ளனர். ஆனால், உள்ளாட்சித் துறை மட்டும் ஆமை வேகத்தில் செயல்படுகிறது என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டு.
அமைச்சர் வேலுமணி மீது புகார்
50 லட்சம் பேர்கூட இருக்கும் கும்பகோணத்தில், சுகாதாரக் கேடுகள் இல்லாத அளவுக்கு உரிய நடவடிக்கைகளை உள்ளாட்சித் துறை எடுத்திருக்க வேண்டும். ஆனால், உள்ளாட்சித் துறை அமைச்சரான வேலுமணி, கோவைக்காரர் என்பதாலோ என்னவோ, மகாமக விழாவில் அவர் ஆர்வம் காட்டவில்லை என்கிறார்கள் உள்ளூர்வாசிகள்.