எடை குறைவு... விலை அதிகம்... எதையும் புகார் செய்ய புதிய ஆப்! தமிழக அரசு அசத்தல்!
கடைகளில் வாங்கும் பொருட்களின் எடை குறைவு மற்றும் விலை அதிகம் உள்ளிட்டவை குறித்து புகார் அளிக்க புதிய ஆப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை கடைகளில் வாங்கும் பொருட்களின் எடை குறைவு மற்றும் விலை அதிகம் உள்ளிட்டவை குறித்து புகார் அளிக்க புதிய ஆப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புகார் அளித்த 48 மணிநேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் நலத்துறை செயலாளர் அமுதா தெரிவித்துள்ளார்.
ரேஷன் கடையில் எதை வாங்கினாலும் சரியான எடையில் இருப்பதில்லை. பேருந்து பயணங்களின்போது நெடுஞ்சாலை உணவகங்களில் வாங்கும் எதுவும் நியாயமான விலையில் கிடைப்பதில்லை. இதுதான் எடை, இவ்வளவுதான் விலை என அனைத்துப் பொருள்களுக்கும் சட்டப்படி நிர்ணயம் செய்திருந்தாலும், தரம், விலை, அளவு என ஏதாவதொரு விதத்தில் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர்.
இவர்களுக்குக் கைகொடுக்கும் வகையில் வந்திருக்கிறது, தமிழக அரசின் TN-LMCTS மொபைல் ஆப். இந்தியாவிலேயே இது முதல்முறை எனலாம். தமிழக அரசின் தொழிலாளர் துறையின் கீழ் இயங்கும் 'சட்டமுறை எடை, அளவு பிரிவு'தான் இந்த மொபைல் ஆப்-ஐ நிர்வகிக்கிறது. இதை மொபைல் போனில் இன்ஸ்டால் செய்துகொள்ள வேண்டும்.
ஆப் முழுவதுமே ஆங்கிலத்தில் தான் இருக்கிறது. அதேசமயம் பயன்படுத்துவதற்கு மிக எளிமையாகவும், பயனுள்ளதாகவும் அமைந்திருக்கிறது. பெட்ரோல் பங்க்கில் ஒரு லிட்டர் என்று சொல்லிவிட்டுக் குறைவாக பெட்ரோல் போடுகிறார்கள், ஷாப்பிங் மாலில் அதிக விலைக்குப் பொருளை விற்கிறார்கள், நெடுஞ்சாலை ஹோட்டலில் சாப்பாடு தரமாக இல்லை என எதைப் பற்றியும் இதில் புகார் செய்ய முடியும்.
இந்த ஆப்-ஐ டவுன்லோடு செய்வதற்கான லிங்க்: https://play.google.com/stor/apps/details?id=com.mslabs.lmctspublic&hl=en
இந்த ஆப் மட்டுமின்றி, இணையம் மூலமாகவும் புகார்களைப் பதிவு செய்யமுடியும்.
http://tnlegalmetrology.in/
என்ற முகவரியில், உங்கள் ஆப்-ல் கொடுத்த மொபைல் எண் மற்றும் பாஸ்வேர்டு ஆகியவற்றைக் கொடுத்து லாக்-இன் செய்யலாம்.
இந்த ஆப் மூலம் புகார் அளித்தால் 48 மணி நேரத்தில் நடவடிக்கை எழுக்கப்படும் என தொழிலாளர் துறையின் செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ், தெரிவித்துள்ளார். பொருள்களின் எடை, அளவு போன்றவற்றில் தவறு இருந்தாலோ அல்லது எம்ஆர்பி விலையை விடவும் அதிகமாக விற்றாலோ இதில் புகார் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகார் கொடுத்தவரின் விவரங்கள் எதுவுமே அதிகாரிகளுக்குத் தெரியாது. அதே சமயம் புகார் அளித்தவர்களுக்கு, புகார் பதிவான எண், எப்போது நடவடிக்கை எடுப்பார்கள், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான விவரங்கள் அனைத்தும் எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பப்படும்.
ஆன்லைனில் பொருள் வாங்கினாலும் கூட புகார் செய்யலாம். சாலையோரக் கடைகள், சூப்பர் மார்க்கெட்கள், மால்கள், ரேஷன் கடைகள், மோட்டல்கள் போன்ற அனைத்துக்கும் இந்த ஆப் மூலம் புகார்களைப் பதிவு செய்யலாம் என்றும் தொழிலாளர் நலத்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.