இந்திய ராணுவத்தின் தரைப்படை, விமானப் படைகளுக்கு புதிய தளபதிகள் நியமனம்
இந்திய ராணுவ தரைப்படை மற்றும் விமானப்படைகளுக்கு புதிய தளபதிகளை மத்திய அரசு நியமித்துள்ளது.
சென்னை: இந்திய ராணுவத்தின் தரைப்படை தளபதியாக இருக்கும் தல்பீர் சிங்கும், விமானப்படை தளபதியாக இருக்கும் அருப் ராஹாவும் இந்த மாதம் 31ம்தேதியுடன் ஓய்வு பெறுகின்றனர். இதனையொட்டி இந்த படைகளுக்கு புதிய தளபதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
ராணுவத் தலைமைத் தளபதியான தல்பீர் சிங் பதவிகாலம் விரைவில் முடிவடைய உள்ளது. 2 மாதங்களுக்கு முன்புதான் புதிய தலைமைத் தளபதியை தேர்ந்தெடுப்பது பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இதனால் தற்போது துணை தலைமை தளபதியாக உள்ள ஜெனரல் பிபின் ராவத், நாட்டின் 26வது தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். 11வது கோர்கா ரைபிள்ஸ்சின் 5வது பட்டாலியனை சேர்ந்த லெப்டினன்ட் ஜெனரல் பிபின் ராவத் தரைப்படையின் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
விமானப்படை தளபதி அரூப் ராஹாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் நிறைவு பெறுகிறது. அதே போல் தற்போது விமானப்படையில் துணை தலைமை தளபதியாக உள்ள ஏர் மார்சல் பி.எஸ்.தனோவா, தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இருவரின் நியமனம் குறித்து மத்திய அரசு செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. இவர்கள் இருவரும் டிசம்பர் 31ம் தேதி புதிய பதவிகளை ஏற்றுக்கொள்வார்கள் என்றும் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.