பெரியாறு அணைக்குச் செல்ல "தமிழ் அன்னை" - புதிய படகு!
கம்பம்: தமிழகஅரசின் பொதுப்பணித்துறையினர் ஆய்வுப் பணிகளுக்காக முல்லைப் பெரியாறு அணை பகுதிக்கு செல்ல வாங்கப்பட்டுள்ள புதிய படகிற்கு தமிழ் அன்னை எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெரியாறு அணையில் கசிவு வெளியேறுவதால் எந்த பாதிப்பும் இல்லை கண்காணிப்புக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
முல்லைபெரியாறு அணை பகுதிக்கு தமிழக அதிகாரிகள் படகில் செல்லவேண்டுமானால் தேக்கடி நீர்தேக்கத்தின் வழியாகவோ அல்லது ஜீப்பில் வல்லகடவு வனப்பாதை வழியாகவோதான் செல்ல வேண்டும்.
அனுமதி மறுப்பு:
வல்லகடவு வழியாக தமிழக அதிகாரிகள் செல்ல கேரள வனத்துறையினர் தொடர்ந்து அனுமதி மறுத்து வருகின்றனர். எனவே தமிழக அதிகாரிகள் 2 படகுகளைப் பயன்படுத்தி வந்தனர்.
புதிய படகுக்கு 90 லட்சம்:
முன்னர் பயன்படுத்தப்பட்ட இந்த 35 ஆண்டுகள் பழமையான படகுகளை மாற்றி புதிய படகுகள் வாங்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி தற்போது ரூபாய் 90 லட்சம் செலவில் புதிய ஸ்டீல் படகு வாங்கப்பட்டுள்ளது.
தமிழ் அன்னை என்று பெயர்:
படகின் பணி முடிந்து கொச்சி படகுதுறை ஆய்வாளர்களின் சான்றிதழுக்காக காத்திருக்கிறது. இந்த படகிற்கு தமிழ் அன்னை என அதிகாரிகள் பெயர் சூட்டி உள்ளனர்.
கசியும் நீர்:
இந்நிலையில் அணை குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் அணையில் இருந்து கசிவு நீர் அதிகமாக வெளியேறுவதாக கேரள அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறைந்த கசிவு நீர்:
இதனால், அணையின் கேலரி பகுதியில் கசிவுநீர் கணக்கிடப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு நிமிடத்திற்கு 70 லிட்டர் கசிவு நீர் அணையில் இருந்து வெளியேறியது. தற்போது 90 லிட்டர் கசிவு நீர் வெளியேறுகிறது. இதனால் அணைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று கண்காணிப்புத்தலைவர் கூறியுள்ளார்.