சங்கரன்கோவில்.. பிறந்து 4 நாட்களே ஆன ஆண் குழந்தை எரித்து கொலை.. 3 பேரிடம் விசாரணை
சங்கரன்கோவில்: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பிறந்து 4 நாட்களே ஆன ஆண் குழந்தை எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் ரயில்வே பீடர் சாலை அருகே உள்ள கோமதி சங்கர் திரையரங்க வளாகத்தில் இன்று அதிகாலை 5:30 மணி அளவில் பாதி எரிந்த நிலையில் ஆண் குழந்தை ஒன்று சடலமாக கிடப்பதாக சங்கரன்கோவில் நகர காவல்துறையினர்க்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த சங்கரன்கோவில் நகர காவல் ஆய்வாளர் மங்கையர்க்கரசி மற்றும் உதவி ஆய்வாளர் சுப்புலட்சுமி ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர். அங்கு 60 சதவீதம் எரிந்து கிடந்த ஆண் குழந்தையின் சடலத்தை கைப்பற்றிய போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் அதன் அருகே ரத்தக் கரை படிந்த துணிகளும் இரண்டு புதிய துணிகளும் எரிந்த நிலையில் கிடந்தன. இது குறித்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங்கிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இறந்த ஆண் குழந்தையின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இச்சம்பவத்தில் சங்கரன்கோவில் சங்குபுரம் 6 வது பகுதியை சேர்ந்த கோமதி (21), கோமதியின் தாயார் இந்திராணி, மற்றும் அவரது தந்தை சண்முகவேல் இடம் காவல் துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் சங்கரன்கோவில் நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.