2 நாட்களுக்கு முன்பு வழங்கப்பட்ட தமிழக அரசின் புதிய பஸ் பழுதாகி பாதியில் நின்றது.. பயணிகள் ஷாக்
நாகர்கோவில் – நெல்லை இடையே இயக்கப்பட்ட அரசின் புதிய பேருந்து நடுவழியில் பழுதாகி நின்றதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நெல்லை: தமிழக அரசு போக்குவரத்து கழகத்துக்கு வாங்கிய புதிய பேருந்துகள் இயக்க தொடங்கிய இரண்டாவது நாளிலேயே நடுவழியில் பழுதாகி நின்ற சம்பவம் பயணிகளிடையே புதிய அரசு பேருந்துகளின் தரம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு புதிதாக வாங்கப்பட்ட அரசுப் பேருந்துகளில், போக்குவரத்துக் கழக கோட்ட ஒதுக்கீட்டின்படி 52 பேருந்துகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் நாகர்கோவில் - திருநெல்வேலி இடையே 30 பேருந்துகள் நடத்துனர் இல்லா பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த புதிய பேருந்துகளின் இயக்கத்தை ஜூலை 2 ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், நாகர்கோவில் - நெல்லை இடையே இயக்கப்பட்டு வந்த நடத்துனர் இல்லா பேருந்து ஒன்று இன்று சனிக்கிழமை நடுவழியில் ஒழுங்கினச்சேரி என்ற இடத்தில் பழுதாகி நின்றுள்ளது. புதிய பேருந்துகள் இயக்கத் தொடங்கி 2 நாட்களிலேயெ பழுதாகி நின்ற சம்பவம் பயனிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதிய பேருந்து பழுதான சம்பவத்தால் புதிய பேருந்துகளின் தரம் எப்படியானது என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
பழைய இன்ஜினை கொண்டு புதிய வண்டி போல பாடி கட்டப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுகிறது. இப்படித்தான், சில வருடங்கள் முன்பு அரசு விரைவு போக்குவரத்து கழகம் ஏசி பஸ்களை இயக்கியது. ஆனால், ஏசி இயங்கும் அளவுக்கு அதன் திறன் இல்லாததால் பயணிகள் வியர்த்து கொட்டியபடி, மூச்சு திணறியபடி பயணித்தனர். அந்த சர்வீஸ்கள் ரத்தாகின.