வண்டலூருக்கு குட்பை சொல்லிவிட்டு கூடுவாஞ்சேரிக்கு போகிறது புதிய புறநகர் பேருந்து நிலையம்
சென்னை: சென்னையை அடுத்த வண்டலூரில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைய இருந்தது. அங்கு நிலம் கையகப்படுத்துவதில் பிரச்சனை ஏற்பட்டதால் இந்தத் திட்டம் கூடுவாஞ்சேரிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் கூடுவாஞ்சேரியும் கோயம்பேடு போன்றே முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக மாறவிருக்கிறது.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புறநகர்ப் பேருந்துகள் புறப்படுவதால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் வகையில் சென்னையை அடுத்த வண்டலூரில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, வண்டலூரில் பேருந்து நிலையம் அமைப்பதற்கான நிலம் கையப்படுத்தும் பணி தொடங்கியது. ஆனால் நிலங்களை கையகப்படுத்துவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வந்த்து.
இதனால் வண்டலூரில் அமையவிருந்த பேருந்து நிலையம் கூடுவாஞ்சேரிக்கு மாற்றப்படுவதாக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். மேலும் கூடுவாஞ்சேரியில் உள்ள வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான நிலத்தை போக்குவரத்துத் துறைக்கு மாற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.