வெள்ளத்தை தடுக்க வடிகால் வசதி, புதிய பாலங்கள்... புதிய அணைகள்: அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
சென்னை: சென்னை மற்றும் புறநகரில் மழை வெள்ள நீரை உடனே வெளியேற்றும் வகையில் வடிகால் வசதிகள் உடனடியாக அமைத்துத் தரப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். புதிய உயர்மட்டப் பாலங்களும், அணைகளும் கட்டப்படும் என்றும் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
தமிழக சட்டசபையில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் மானியக் கோரிக்கை மீது நேற்று எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அவர்களுக்கு அந்தத் துறைகளின் அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி பதிலளித்துப் பேசினார்.
அப்போது அவர் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை சாலைகள், சுரங்கப்பாதைகளில் மழை நீரை துரிதமாக வெளியேற்ற மின்மோட்டார், மின் ஆக்கி மற்றும் தேவையான சிறுபாலங்கள் மற்றும் வடிகால் வசதிகள் ரூ.31.25 கோடி மதிப்பில் உடனடியாக மேற்கொள்ளப்படும் என்றார்.
சுரங்கப்பாதைகள்
சென்னை ஆலந்தூர் தில்லை கங்கா நகரில் உள்ள வாகன சுரங்கப்பாதைக்கு கூடுதலாக ஒரு உயர்மட்ட சாலை மேம்பாலம் ரூ.85 கோடி மதிப்பில் கட்டப்படும். இதற்கான விரிவான திட்ட அறிக்கை நடப்பாண்டில் தயாரிக்கப்படும்.
தடுப்பணைகள்
காஞ்சீபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம் வெங்காஞ்சேரி கிராமம் செய்யாற்றில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் அணைக்கட்டு கட்டப்படும்.
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம் அட்ரம்பாக்கம் கிராமம் கொசஸ்தலையாற்றில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும்
வெள்ளத்தில் சேதமடைந்த பாலங்கள்
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி - நாகலாபுரம் சாலை, கொரட்டூர் - தின்னனூர் - பெரியபாளையம் சாலை: காஞ்சீபுரம் மாவட்டம், நெரும்பூர் - புதுப்பட்டினம் ஆகிய சாலைகளில் வெள்ளத்தினால் சேதமடைந்த 3 பாலங்களை உயர்மட்ட பாலங்களாக ரூ.64 கோடி ரூபாய் மதிப்பில் திரும்ப புதிதாகக் கட்டப்படும். இதற்கான விரிவான திட்ட அறிக்கை நடப்பாண்டில் தயாரிக்கப்படும்.
உயர்மட்ட பாலம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அய்யம்பேட்டை மற்றும் கணபதி அக்கிரஹாரம் சாலையில் 60 ஆண்டுகள் பழமையான குறுகிய பாலத்திற்கு மாற்றாக உயர் மட்ட பாலம் ரூ.12 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும்.
புதிய பாலங்கள்
வெண்ணாற்றின் குறுக்கே திருக்காட்டுப்பள்ளி - செங்கிப்பட்டி - பட்டுக்கோட்டை சாலையில் 150 ஆண்டுகள் பழமையான செங்கல் வளைவு குறுகிய பாலத்திற்கு மாற்றாக ரூ.20 கோடி ரூபாய் மதிப்பிலும் புதிய பாலங்கள் கட்டப்படும். இதற்கான விரிவான திட்ட அறிக்கை நடப்பாண்டில் தயாரிக்கப்படும்.
விழுப்புரம் மாவட்டம் மேட்டுப்பாளையத்தையும், கடலூர் மாவட்டத்தில் உள்ள மேல்குமாரமங்களம் கிராமத்தையும் இணைக்கும் வகையில் உயர்மட்ட பாலம் ரூ.38 கோடி மதிப்பில் கட்டப்படும். இதற்கான விரிவான திட்ட அறிக்கை நடப்பாண்டில் தயாரிக்கப்படும்.
ரயில்வே மேம்பாலங்கள்
ரயில்வே திட்டப்பணிகளின் கீழ் 13 ரயில்வே மேம்பாலங்கள் மற்றும் கீழ்பாலங்கள் ரூ.749 கோடியே 88 லட்சம் மதிப்பில் கட்டப்படும். நடப்பாண்டில் ரூ.3.90 கோடி மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.
கோவை மாவட்ட சாலைகள்
கோயம்புத்தூர் விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மேட்டுப்பாளையம், கோத்தகிரி மற்றும் ஊட்டி வரை குறைவான தூரத்தில் விரைவாக செல்ல ஏதுவாக முதற்கட்டமாக, கோயம்புத்தூர் விமான நிலையம் முதல் சித்ரா - குரும்பபாளையம் வரை உள்ள 8.60 கி.மீ. நீளமுள்ள சாலையை அகலப்படுத்தி, நேர்படுத்தி மேம்பாடு செய்ய விரிவான திட்ட அறிக்கை மற்றும் நில எடுப்பு பணிகள் நடப்பாண்டில் ரூ.21.50 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும்.
தேசிய நீரியல் திட்டம்
தேசிய நீரியல் திட்டம் ரூ.100 கோடி மதிப்பீட்டில் 2016 முதல் 2024 வரை 8 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட உள்ளது.
தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்பு திட்டத்தை போல், காவிரி-அக்னியாறு-தெற்கு வெள்ளாறு- மணிமுத்தாறு-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டம், பெண்ணையாறு-செய்யாறு இணைப்பு திட்டம், பெண்ணையாறு-பாலாறு இணைப்பு, காவிரி (மேட்டூர் அணை)-சரபங்கா-திருமணிமுத்தாறு-அய்யாறு இணைப்பு ஆகிய திட்டங்களுக்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
நீர்த்தேக்கம்
நெல்லை மாவட்டம், அம்பை வட்டம், கடையம் கிராமத்தில் ராமநதியின் வெள்ள நீரை ஜம்புநதி பாசன பகுதிக்கு திரும்ப உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணி, விரிவான ஆய்வு பணிக்காக ரூ.5.40 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் முன்னேற்றத்தில் உள்ளது. கல்லிடைக்குறிச்சியில் எலுமிச்சையாற்றின் குறுக்கே நீர்த்தேக்கம் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது.