கொழுக்குமலைக்கு வந்து தீயில் கருகிப் போன புதுமாப்பிள்ளை விவேக்... #TheniForestFire
குரங்கணியில் நிகழ்ந்த தீ விபத்தில் ஈரோடு விவேக் உயிரிழந்துள்ளார். இவர் புதுமாப்பிள்ளையாவார்.
Recommended Video
தேனி: குரங்கணியில் நிகழ்ந்த தீ விபத்தில் சிக்கி ஈரோட்டை சேர்ந்த விவேக் உயிரிழந்துள்ளார். இவருக்கு திவ்யா என்பவருடன் திருமணமாகி 100 நாட்களே ஆன நிலையில் தீ விபத்தில் சிக்கி மரணமடைந்துள்ளார்.
குரங்கணி மலை பகுதியில் மலையேற்ற பயிற்சிக்காக சென்ற 9 பேர் பலியாகிவிட்டனர். அவர்களுள் 6 பேர் சென்னையை சேர்ந்தவர்கள், 3 பேர் ஈரோட்டை சேர்ந்தவர்கள். அதில் புது மாப்பிள்ளை விவேக்கும் ஒருவர்.
கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் சென்னை பகுதிகளைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள், சுற்றுலாப்பயணிகள், குழந்தைகள் என 36 பேர் போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் பற்றி எரியும் பயங்கர காட்டுத்தீயில் சிக்கி கொண்டனர்.
புதுமணத்தம்பதியர் மரணம்
இத்தீயில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த மூன்று பேரில் ஈரோடு கவுந்தப்பாடியைச் சேர்ந்த விஜயா, விவேக், அவரது நண்பர் தமிழ் செல்வன் ஆகியோர் தீ விபத்தில் உயிரிழந்து விட்டனர். விவேக்கின் மனைவி திவ்யா உயிரிழந்து விட்டதாக முதலில் தகவல் வெளியானது. அவர் தற்போது 90 சதவிகித காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
விவேக் திவ்யா 100வது நாள்
துபாயில் வேலை செய்து வந்த விவேக், ஈரோடு அருகே கவுந்தம்பாடியை சேர்ந்தவர். கோபிச்செட்டிபாளையத்தில் கல்லூரி விரிவுரையாளராக பணி செய்து வந்த திவ்யாவை கடந்த நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். கடந்த சில நாட்களுக்கு முன்புதான் திவ்யா, விவேக் தம்பதியர் 100வது நாளை கொண்டாடியுள்ளனர். அதனை தனது முகநூலில் பதிவிட்டுள்ளார் விவேக்.
கொழுக்குமலை பயணம்
ஒரு வாரத்தில் துபாய் செல்ல இருந்த நிலையில் புதுமணத்தம்பதிகள் இருவருமே கொழுக்குமலை பகுதிக்கு மலையேற்றப் பயிற்சிக்கு சென்றனர். 2 நாட்கள் வனத்தில் உற்சாகமாக சுற்றியுள்ளனர். இதனை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் விவேக். இந்த புகைப்படத்திற்கு நண்பர்கள் பலரும் பத்திரமாக இருங்கள் என்று கமெண்ட் போட்டுள்ளனர்.
புது மாப்பிள்ளை மரணம்
விமானம் மூலம் மூணாறு சென்று அங்கிருந்து மலையேற்றப் பயிற்சியில் பங்கேற்றனர். பசுமையை ரசிக்கப் போன இடத்தில் நெருப்பின் தீ நாக்குகள் சுட்டெரித்தது. செய்வதறியாது தவித்த விவேக் தனது மனைவியை பற்றிக்கொண்டு ஓடினார். கூடவே நண்பரும் பின்தொடர்ந்து ஓடியும் பயனில்லை. தீ விபத்தில் 3 பேரும் சிக்கினர். இதில் விவேக், தமிழ் செல்வன் மரணமடைந்து விட்டனர். திவ்யா 90 சதவிகித காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
கதறிய உறவினர்கள்
ஈரோட்டில் இருந்து 8 பேர் மலையேற்றப் பயிற்சிக்கு சென்றனர். அவர்களில் விஜயா, விவேக், அவரது நண்பர் தமிழ்செல்வன் உயிரிழந்து விட்டனர். 5 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். விவேக் மனைவி திவ்யாவிற்கு 100 சதவிகிதம் தீ காயம் ஏற்பட்டுள்ளது. மதுரை மருத்துவமனையில் சிசிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பசுமையை ரசிக்கப் போனவர்கள் கரிக்கட்டையாக திரும்பி வந்திருக்கிறார்களே என்று உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கதறி துடிக்கின்றனர்.