நெல்லை அரசு மருத்துவமனைக்கு புதிய டீன்... ஜனவரி 7ம் தேதி பொறுப்பேற்பு!
நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு புதிய டீன் நியமிக்கப்பட்டுள்ளார்.
நெல்லை: நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு புதிய டீன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வரும் 7ம் தேதி பொறுப்பேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
நெல்லை அரசு மருத்துவ கல்லூரி டீனாக இருந்த 'சித்தி அத்திய முனைவரா' கடந்த நவம்பர் மாதம் ஓய்வு பெற்றார். இதையடுத்து பொறுப்பு டீனாக டாக்டர் ரவிசந்திரன் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் தற்போது நெல்லை மருத்துவ கல்லூரி புதிய டீனாக டாக்டர் கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். நெல்லை அரசு மருத்துவ கல்லூரி துணை முதல்வராக ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் பணியாற்றினார்.
கடந்த செப்டம்பர் மாதம் டீனாக பதவி உயர்வு பெற்று நாகர்கோவில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பொறுப்பேற்றார். தற்போது அங்கிருந்து நெல்லைக்கு மாற்றப்பட்டுள்ளார். இவர் நெல்லை மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்தவர்.
இவர் 1999ம் ஆண்டு நெல்லை மருத்துவமனையில் சிறுநீரக அறுவை சிகிக்சை துறை தலைவராக இருந்தவர். இதுகுறித்து அவர் கூறுகையில், நெல்லையில் கட்டப்பட்டு வரும் சூப்பர் ஸ்பெஷலிட்டு மருத்துவமனை பணியை விரைந்து முடிக்கவும், மண்டல கேன்சர் மைய கட்டிட பணிகளை விரைந்து முடிக்கவும், அதற்கான கருவிகளை முழுமையாக இயங்க செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்படும் என்று கூறினார்.
மேலும் இருதய சிகிச்சை பிரிவில் ஆஞ்சியோ கிராபி சிகிச்சை முறையை அறிமுகம் செய்வது குறித்த பணிகள் தீவிரமாக நடக்கும் என்றும் தெரிவித்தார்.