அந்தமான் அருகே புதிய காற்றழுத்தம்: தமிழக வட மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு
சென்னை: வங்கக்கடலின் தென் பகுதியில் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து கூறிய ஆய்வு மைய இயக்குநர் ரமணன், தற்போது அந்தமான் அருகே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் மையம் கொண்டிருக்கிறது.
இன்னும் 2 நாட்களில் அந்த காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகம் நோக்கி நகர்ந்து வரும். தமிழக கடலோரத்தை நெருங்கும் போது அந்த காற்றழுத்தம் வலுவடையக்கூடும்.
ஏற்கனவே ஆந்திரா மாநிலத்தின் மேலடுக்கில் சுழற்சி ஏற்பட்டு நீடித்தப்படி உள்ளது. இந்த இரு நிலைகளால் தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றார்.
புதிய காற்றழுத்தம் இந்த வார இறுதியில் தமிழக கடலோரத்தை நெருங்கும். இதனால் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் 13, 14 ஆம் தேதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
புயல் நகரும் திசையை பொறுத்து சென்னையில் மழை தாக்கம் இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குநர் ரமணன் கூறியுள்ளார்.