அந்தமான் அருகில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை
சென்னை: வங்கக் கடலில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஹெலன் புயல் ஆந்திர மாநிலத்தில் கரையைக் கடந்தது. இந்நிலையில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தை நெருங்கி நகர்ந்து வந்தால் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் தமிழகம் மற்றும் புதுவையில் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ இன்று பெய்யும். சென்னையைப் பொருத்தவரையில் வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவில் மழை பெய்யும்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் சிவகிரியில் 90 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. கோவில்பட்டி, புதுச்சேரியில் 40 மி.மீ. மழையும், திண்டிவனம், தக்கலையில் 30 மழையும் பதிவாகியுள்ளது.
உத்திரமேரூர், குழித்துறை, மணியாச்சி, நாகர்கோவில், கடலூர், பேச்சிப்பாறையில் 20 மி.மீ., மதுராந்தகம், வந்தவாசி, பூதபாண்டி, மரக்காணம், ஸ்ரீவைகுண்டம், குளச்சல், வால்பாறை, விளாத்திகுளத்தி 10 மி.மீ. ஆகிய பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.
லட்சத்தீவு அருகே மேலடுக்கு சுழற்சி
இதனிடையே அரபிக் கடலில் லட்சத்தீவு அருகே மேல் அடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொருத்த வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.