கணக்கு மணக்கு ஆமணக்கு.. இந்தக் கஷ்டம் தீர நவீன "கருவி" அறிமுகம்!
திருநெல்வேலி: மண்டைய பிச்சிக்கிட்டாலும் பலருக்கு கணக்கு வராது. இதனால் மார்க் குறைந்து, தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களும் நிறைய பேர் இருக்காங்க. இவர்களுடைய கஷ்டங்களை போக்கி கணக்குத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெறுவதற்காக நவீன கருவிகள் திருநெல்வேலி பள்ளிக் கூடங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களுக்கு ஒரே குஷிதான்.
கஷ்டமாக இருக்கும் கணிதப் பாடத்தை எளிதில் புரிந்து கொள்ளவும், மனதில் நிலை நிறுத்தவும் மனித வள மேம்பாட்டுத் துறை புது முயற்சி ஒன்றை மேற்கொண்டு வருகிறது. ஆர்.ஆர்.ஏ என்ற திட்டத்தின்படி எல்லா வகையான கணிதப் பாடங்களையும் எளிதாக கற்க நவீன உபகரணங்கள் மற்றும் டேப்லெட் ஆகியவற்றை அறிமுகம் செய்துள்ளது. இந்தக் கருவிகளின் உதவியுடன் மாணவர்கள் எளிதாக பாடங்களை கற்க முடியும்.
கணிதத்திற்கு மட்டும் மல்லாமல் அறிவியல், ஆங்கிலம் உள்ளிட்ட சற்று கடினமாக இருக்கும் பாடங்களுக்கும் இந்த நவீன கருவி பயன்படுத்தப்பட உள்ளது. இதனால் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், கணக்கு மட்டுமல்லாமல் ஆங்கிலம், அறிவியல் உள்ளிட்ட பாடங்களை இந்த நவீன கருவியின் மூலம் எளிதாக பயின்று மதிப்பெண்களை அள்ளிக் குவிக்கலாம்.
இந்தக் கருவிகளை வழங்குவதற்காக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 5 சதவீத பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு ஆசிரியர்களுக்கு கருவி குறித்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள்.
இத்திட்டம் மாநிலம் முழுவதும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. நாளடைவில் ஆன்லைன் மூலமும் இந்தப் பயிற்சியை அளிக்க திட்டமிட்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.