புதிய கல்வி கொள்கையில் அரசியல் இல்லை.. தேச வளர்ச்சி மட்டும்தான்… பிரகாஷ் ஜவடேகர்
புதிய கல்விக் கொள்கை தேச வளர்ச்சிக்காக மட்டும்தான் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
சென்னை: புதிய கல்வி கொள்கையில் அரசியல் எதுவும் இல்லை என்று சென்னை வந்த மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
பாஜக அரசு மத்திய ஆட்சிப் பொறுப்பை ஏற்றதில் இருந்து கல்வியில் ஆர்.எஸ்எஸ். கொள்கையின் அடிப்படையில் பல்வேறு மாற்றங்களை செய்த வருகிறது. குறிப்பாக சமஸ்கிருதத்தை திணிப்பது, மாநிலங்களுக்கு கல்வி உரிமைகளை பறிப்பது என பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதற்காக பாஜக அரசு புதிய கல்விக் கொள்கை ஒன்றையும் உருவாக்கியுள்ளது. இந்தக் கல்விக் கொள்கைக்கு இந்திய முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில், சென்னையில் பாரதிய ஜெயின் சங்கத்தின் 32வது தேசிய மாநாட்டில் கலந்து கொண்ட மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேசியதாவது:
பிரதமர் நாட்டில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அதில், கல்விதுறை மேம்படுத்துவதும் ஒன்று. இந்தியாவில் கல்வித் துறையை காலமாற்றத்திற்கு ஏற்ப மாற்றங்கள் செய்வது அவசியம்.
புதிய கல்விக் கொள்கையை பயன்படுத்தி சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகள் மற்றும் சலுகைகளை சிதைப்பது நோக்கமல்ல. ஜாதி, மதங்களை கடந்து புதிய கல்விக் கொள்கை செயல்படும். அது குறித்து பல்வேறு மாநிலங்களில் கருத்துக்களும், ஆலோசனைகளும் பெறப்பட்டு வருகிறது. புதிய கல்விக் கொள்கையின் வரைவு பகுதியில் 10 சதவீதம் மட்டுமே வெளியாகியுள்ளது. இது மாற்றத்திற்கு உட்பட்டது. ஆனால் சரியான புரிதல் இல்லாததால்தான் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் எதிர்ப்புகளும் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
புதிய கல்வி கொள்கை குறித்து வரும் 10ம் தேதி எம்பிக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் கருத்துகள் கேட்கப்பட உள்ளன. நாட்டின் வளர்ச்சிக்காக இந்த கல்விக் கொள்கை இருக்கும். இதில் ஒன்றும் அரசியல் இல்லை என்றும் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.