புதிய பேஸ்புக் பக்கத்தை தொடங்கியது தமிழக செய்தி மக்கள் தொடர்புத்துறை
சென்னை: அரசின் ஆக்கபூர்வமான பணிகளையும், முதல்வரின் அறிவிப்புகளையும் பொது மக்களிடம் உடனுக்குடன் கொண்டு செல்வதற்கு வசதியாக தமிழக செய்தி மக்கள் தொடர்புத் துறை தனியாக பேஸ்புக் பக்கம் ஒன்றை தொடங்கியுள்ளது.
தற்போது தமிழக அரசின் திட்டங்கள், சாதனைகள், முதல்வரின் அறிவிப்புகள், மக்கள் நலத் திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள் குறித்த செய்திகள், புகைப்படங்கள் ஆகியவை தற்போது ஊடகங்கள் மூலம் மக்களுக்கு விளம்பரப்படுத்தப்பட்டு வருகின்ரான.
இது மட்டுமின்றி, செய்தி மக்கள் தொடர்புத் துறையின் இணையதளமான http:/www.tndipr.gov.in மற்றும் அரசு இணையதளமான http://www.tn.gov.in ஆகியவற்றிலும் அவை பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
ஆனால், சமூகவலைதளப் பக்கங்களின் வளர்ச்சியையும் சமீபகாலமாக அரசியல் கட்சிகள் மற்றும் கட்சித் தலைவர்கள் பயன்படுத்தி வருகின்றன. அவற்றின் தாக்கமும் அதிகமாக இருக்கின்றன.
எனவே, எளிதாக அரசின் செயல்பாடுகள் மக்களைச் சென்றடையும் வகையில் புதிய பேஸ்புக் பக்கம் ஒன்றைத் தொடங்கியுள்ளது செய்தி மக்கள் தொடர்புத் துறை.
இந்தப் புதிய பக்கத்திற்கு 'TN DIPR' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்தத்துறையின் உயர் அதிகாரிகள் கூறுகையில், "தற்போதைய சூழ்நிலையில், சமூக வலைதளங்களின் முன்னேற்றமும், வளர்ச்சியும் பெருமளவில் உள்ளன. அதில் முகநூல் என அழைக்கப்படும் 'பேஸ்புக்'கும் உள்ளது.
அரசின் அனைத்து செயல்பாடுகளும் உடனுக்குடன் மக்களைச் சென்றடையும் வகையில், முதல்-அமைச்சரின் அறிவிப்புகள், மக்கள் நலத் திட்டங்கள், சாதனைகள் ஆகியவற்றை உடனே 'பேஸ்புக்'கில் பதிவிட்டு வெளியிட செய்தி மக்கள் தொடர்புத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, TN DIPR என்ற முகநூல் கணக்கு உருவாக்கப்பட்டு அதன்வழியாக அரசின் பணிகள் குறித்தும், முதல்-அமைச்சரின் அறிவிப்புகளையும் மக்களுக்கு கொண்டு செல்லும் பணியை இந்தத் துறை மேற்கொண்டுள்ளது" என்கின்றனர்.