அடடா... புது பஸ்ஸு அதுக்குள்ள புஸ்ஸுன்னு போயிருச்சே.. திருவாரூரில் பாதியில் நின்ற பேருந்து!
புதிய அரசு பேருந்து பழுதாகி நடுவழியில் நின்றுவிட்டது.
Recommended Video
திருவாரூர்: புதிய அரசு பேருந்து ஒன்று மீண்டும் பழுதாகி நடுவழியில் நின்றுவிட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன் தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய அரசு பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டன. இதில் 515 புதிய அரசு சொகுசு பேருந்து சேவையை முதல்வர் பழனிசாமி ஜூலை 2-ம் தேதி தொடங்கி வைத்தார். அரசு விரைவு போக்குவரத்துக்கழக வரலாற்றில் முதல்முறையாக ரூ.314 கோடி செல்வில் தயாரான இந்த பேருந்துகளில், குளிர்சாதன, படுக்கை வசதிகள், கழிப்பறை ஜிபிஎஸ், சிசிடிவி கேமரா வசதிகள் கொண்டு செய்யப்பட்டுள்ளன.
ஆனால் பேருந்து சேவையின் இரண்டாம் நாளிலேயே நாகர்கோவில் - நெல்லை இடையே இயக்கப்பட்டு வந்த நடத்துனர் இல்லா பேருந்து ஒன்று கடந்த சனிக்கிழமை நடுவழியில் திடீர் என பழுதடைந்து, ஒழுகினசேரியில் நின்று விட்டன. இதனால் அதிர்ச்சியும், அவதியும் அடைந்த பயணிகள், நீண்ட நேர காத்திருப்புக்கு பின்னர் வேறு பேருந்தில் மாற்றி அனுப்பப்பட்டனர்.
இந்நிலையில், இன்று திருத்துறைப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி ஒரு புதிய பேருந்து புறப்பட்டது. இதில் ஏராளமான பயணிகள் இருந்தனர். ஆனால் திடீரென்று திருவாரூர் அருகே கூடூர் என்ற கிராமத்தின் அருகே பழுதாகி இந்த பேருந்து நின்றுவிட்டது. அதற்கு காரணம், பேருந்தின் இரும்பு குழாய் உடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பேருந்தில் பயணித்தவர்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.
பேருந்து பழுதாகி நின்றதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பேருந்து நிறுவன ஊழியர்கள் பேருந்தை சரிசெய்ய செய்ய கொண்டுசென்றனர். புதிய பேருந்துகள் இப்படி பழுதாகி நடுவழியில் நின்றுவிடுவதால் அதிர்ச்சியடைந்த பயணிகள், இயக்கப்பட்டு வரும் புதிய பேருந்துகள் அனைத்தையும் ஒருமுறையாவது ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.