புதிய கிரானைட் கொள்கை, அரசே தாதுமணல் விற்பனை செய்யும்: சட்டசபையில் ஆளுநர் ரோசய்யா
சென்னை: தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ நடவடிக்கை எடுக்கப்படும், புதிய கிரானைட் கொள்கை வகுக்கப்படும், தாதுமணல் விற்பனை அரசே மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளுநர் ரோசய்யா தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்களுக்கு பாராட்டு தெரிவித்த ரோசய்யா, நலத்திட்டங்கள் மேலும் தொடரும் என்று கூறினார்.
தமிழகத்தில் 15வது சட்டசபைக்கான தேர்தல் கடந்த மே 16ம் தேதி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. 19ம் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் அதிமுக அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிமைத்தது. இதையடுத்து 6வது முறை, முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார். அவரை தொடர்ந்து 32 அமைச்சர்கள் பொறுப்பேற்றனர்.
15வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் ரோசய்யா உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் உரை நிகழ்த்துவதற்காக சட்டசபைக்கு இன்று காலையில் 11 மணிக்கு வந்த ஆளுநர் ரோசய்யாவை சபாநாயகர் ப.தனபால், சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் ஆகியோர் வரவேற்று சட்டசபைக்குள் அழைத்து வந்தனர். அதைத் தொடர்ந்து ஆளுநர் ரோசய்யா ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தினார்.
தமிழில் வணக்கம் கூறி உரையை தொடங்கினார் ரோசய்யா, புதிதாக பொறுப்பேற்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்களை கூறினார். புதிய அரசு பதவியேற்றவுடன் சிறு, குறு விவசாயிகள் கடன் தள்ளபடி செய்யப்பட்டதையும், டாஸ்மாக் நேரம் குறைக்கப்பட்டதையும் சுட்டக்காட்டினார். மெலும் பேசிய அவர் ஊழலை கட்டப்படுத்த லோக் அயுக்தா அமைக்கப்படும் என்றார். விசைத்தறிகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது என்றார்.
38 பக்கங்கள் கொண்ட உரையை 38 நிமிடங்கள் வாசித்தார் ஆளுநர் ரோசய்யா, ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்
நலத்திட்டங்கள்
32 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழகத்தில் ஆளுங்கட்சி ஆட்சி அமைத்துள்ளது, 100 யூனிட் இலவச மின்சாரம் அளிக்கப்படுகிறது சிறு குறு விவசாயிகளுக்கு பயிர்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது, ஏழை பெண்களுக்கு தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது என்றார்.
ஜல்லிக்கட்டு தடை
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
லோக் ஆயுக்தா
தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய ரோசய்யா, காவிரி நதிநீர் வாரியம், நீர் மேலாண்மை அமைக்க மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம் என்றும், மத்திய மாநில அரசுகளுக்கு இடையே நிதி பகிர்வு தேவை என வலியுறுத்துவோம் என்றும் கூறினார்.
அமைதிப்பூங்கா
தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அம்மா கால் சென்டர் மையம் மேலும் விரிவாக்கப்படும், தமிழக கடலோர மாவட்டங்களில் வெள்ள சேதத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இலங்கை தமிழர்கள்
இலங்கை தமிழர் விவகாரத்தில் முதல்வர் சிறப்பாக செயல்படுகிறார் என்று கூறிய ரோசய்யா, இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
உள் கட்டமைப்பு வசதிகள்
மத்திய மாநில அரசுகளுக்கு இடையே நிதி பகிர்வு தேவை என வலியுறுத்துவோம் என்றும் கிராமப்புற உள் கட்டமைப்பு மேம்படுத்தப்படும் என்றும், தமிழ்நாடு கிராமப்புற குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் ஆளுநர் ரோசய்யா கூறினார்.
புதிய ஜவுளி பூங்கா
2023 தொலைநோக்குத் திட்டத்தை எட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வேலை வாய்ப்பை அதிகரிக்க புதிய ஜவுளி பூங்காக்கள் உருவாக்கப்படும். பொருளாதார வளர்ச்சியை எட்ட சிறு, குறு தொழில்கள் ஊக்குவிக்கப்படும் என்றும் ரோசய்யா கூறினார்.
வேளாண் சந்தை
தமிழகத்தில் உள்ள வேளாண் சந்தைகள் தேசிய சந்தைகளுடன் இணைக்கப்படும், அனைத்து இல்லங்களிலும் கழிவறை வசதிகள் ஏற்படுத்தப்படும் தமிழகத்திற்கு புதிய முதலீடுகளை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரோசய்யா குறிப்பிட்டார்.
தாது மணல் விற்பனை
புதிய கிரானைட் கொள்கைகள் வகுக்கப்பட்டு கிரானைட் விற்பனை முறைப்படுத்தப்படும் என்று குறிப்பிட்ட ரோசய்யா, தாது மணல் விற்பனையை அரசே ஏற்று நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
குடிசைகள் இல்லாத தமிழகம்
ஸ்மார்ட் சிட்டி திட்டத்துடன் இணைந்து நகர்புற கட்டமைப்பு மேம்படுத்தப்படும் என்றும், சென்னையில் மூடப்பட்ட நோக்கியா ஆலையை மீண்டும் திறக்க அரசு நடவடிக்கை எடுக்கப்படும், குடிசைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ரோசய்யா கூறினார்.
மின் உற்பத்தி
மருத்துவ பொது நுழைவுத்தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற நடவடிக்கை எடுக்கப்படும், 5 ஆண்டுகளில் 13 ஆயிரம் மெகாவாட் அனல்மின் திறன் உருவாக்கப்படும் என்றும் 3 ஆயிரம் மெகாவாட் சூரிய மின்திறனும் உருவாக்கப்படும் என்றும் ரோசய்யா தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.