சென்னை சென்ட்ரல் குண்டுவெடிப்பு... 'ஐஎம்' அல்ல... 'சிம்' தான் காரணம்?
சென்னை: புதிதாக உருவாகி ரகசியமாக செயல்பட்டு வரும் செளத் இந்தியன் முஜாஹிதீன் என்ற புதிய தீவிரவாத அமைப்புதான் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், குவஹாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வைத்திருக்கலாம் என்று புதிய சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த அமைப்பு இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் ஒரு கிளைதான் என்றும் கூறப்படுகிறது. இதுவரை நடந்த புலனாய்வுகளின் அடிப்படையில் இந்த சந்தேகம் வலுவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
முதலில் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பே நேரடியாக இந்த குண்டுவெடிப்பில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. ஆனால் சிபிசிஐடி போலீஸ் விசாரணையில் சிம் அமைப்பு குறித்த சந்தேகம் வெளிவந்துள்ளது.
இந்த அமைப்பைத் தொடங்கியவர் அபுபக்கர் சித்திக். அவரை பல்வேறு வழக்குகளில் ஏற்கனவே தமிழக போலீஸார் தேடி வருகின்றனர். இவர் சிக்கினால் சிம் அமைப்பு குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும், அதன் நாச வேலைத் திட்டங்கள் குறித்தும் பல முக்கிய விவரங்கள் தெரிய வரக் கூடும் என்றும் போலீஸார் நம்புகின்றனர்.
மேலும் சென்னையில் சென்ட்ரல் ரயில் நிலைய சம்பவத்திற்குப் பின்னர் சிக்கிய சிலரிடம் நடந்த விசாரணையில், என்ன மாதிரியான நாச வேலைகள் குறித்த திட்டங்கள் நாசகாரர்களிடம் உள்ளன என்பது குறித்து தெளிவான விவரம் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையே சித்திக் குறித்து சில முக்கியத் தகவல்கள் போலீஸாருக்குக் கிடைத்துள்ளன. அதாவது இவர் குறிப்பிட்ட சிலரை மட்டுமே குறிவைத்து அவர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதில் கில்லாடியாம். குறிப்பாக இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களை குறி வைத்து அவர்களுக்கு எதிரான தாக்குதலை நடத்துவதிலும், திட்டமிடுவதிலும் இவர் துல்லியமாக செயல்படுவாராம்.
மேலும் அதிக அளவிலான உயிர்ப்பலி ஏற்படாமல் பீதியை மட்டும் ஏற்படுத்துவதும் சித்திக் கும்பலின் நோக்கமாக இருக்கலாம் என்றும் நம்ப்படுகிறது.
குவஹாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடித்த இரண்டு குண்டுகளும் கூட குறைந்த சக்தி கொண்டவைதான். அந்த சம்பவத்தில் ஸ்வாதி என்ற இளம் பெண் உயிரிழந்தார். 14 பேர் காயமடைந்தனர்.
இந்த ரயில் திட்டமிட்ட நேரத்தில் பயணித்திருந்தால் இந்த குண்டுகள் ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டையில் வெடித்திருக்கும். இது நெல்லூர் மாவட்டத்தில் உள்ளது. நெல்லூரில் அன்று மாலை நரேந்திர மோடியின் பிரசாரக் கூட்டத்திற்கு திட்டமிடப்பட்டிருந்தது என்பதால் இது மோடியை குறி வைத்து நடந்த தாக்குதல் என்றும் கருதப்படுகிறது.
ஏற்கனவே சித்திக்கின் கூட்டாளிகளான பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக், போலீஸ் பக்ருதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டு விட்டனர். சித்திக் மட்டுமே தலைமறைவாக இருக்கிறார். அவரைப் பிடிக்க தற்போது தேடுதல் வேட்டைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளாம்.