கன்னியாகுமரி அருகே தாழ்வு நிலை.. கடலோர, உள் மாவட்டங்களில் கன மழை
சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை கன்னியாகுமரிப் பகுதியில் நிலை கொண்டிருப்பதால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களிலும் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பரவலாக பல பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. சாதாரண தூறல் முதல் கன மழை வரை பெய்து வருகிறது.
தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இன்று மழை பெய்து வருகிறது. இந்த மழை 24 மணி நேரம் நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறுகையில், இலங்கைக்கு அருகே தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை மேற்கு நோக்கி நகர்ந்து குமரி அருகே நிலைகொண்டுள்ளதால், தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்திற்கு மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளார்.
சமீபத்தில்தான் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக கடலூர் பெரும் வெள்ளக்காடானது. அதேபோல சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களும் பெரும் பாதிப்பை சந்தித்தன.
சென்னையின் புறநகர்கள் பல இன்னும் வெள்ளத்தில் மிதக்கின்றன. சென்னையைச் சுற்றியுள்ள அத்தனை ஏரிகளும் நிரம்பி வழிகின்றன. மக்கள் பெரும் சொல்லொணாத் துயரத்தையும் சந்திக்க நேரிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
விட்டு விட்டு மழை
சென்னையில் காலை முதலே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. சிறிய தூறலாகவும், சற்று பெரிய மழையாகவும் இது தொடர்கிறது. வானம் தொடர்ந்து மேகமூட்டாகவும் உள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இந்தக் கனமழை காரணமாக செண்பகத்தோப்பு சுற்றுலா பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல காவிரி டெல்டாவில் தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.
வைகை வெள்ளப் பெருக்கு
தேனி மாவட்டம் வைகை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக வைகை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.